விஜய்யின் அடுத்த அத்தியாயம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா சினிமாவில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' போன்ற தெலுங்குப் படங்களின்
வாயிலாகக் கவனம் ஈர்த்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. குறிப்பாக அவரது 'அர்ஜுன் ரெட்டி' பெற்ற வெற்றியானது இதுவரைக்கும் ரீமேக் படமே எடுக்காதவரான இயக்குநர் பாலாவையே ரீமேக் எடுக்கவைத்துள்ளது. அந்தவகையில் விக்ரம் மகன் துருவ்வை வைத்து 'வர்மா' எனும் பெயரில் அர்ஜுன் ரெட்டியை ரீமேக் செய்துவருகிறார் பாலா.
பாலிவுட்டிலும் பேசுபொருளாகி இருக்கிற விஜய் தேவரகொண்டா அடுத்ததாக ஸ்ரீ தேவி மகள் ஜான்வியுடன் இணைந்து ஒரு படம் நடிக்கலாம் எனவும் சினிமா வட்டாரத்தில் கூறிவருகின்றனர். இதற்கிடையே இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 'நோட்டா' எனும் நேரடித் தமிழ் படம் வாயிலாக கோலிவுட்டில் என்ட்ரியாகவிருக்கும் விஜய் தேவரகொண்டாவை வரவேற்க இப்போதே தயாராகி வருகின்றனர் தமிழ் ரசிகர்கள். இந்தப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் தனது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அதாவது அவர் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தற்போது தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்திற்கு 'கிங் ஆஃப் தி ஹில்' (king of the hill) எனப் பெயர் சூட்டியுள்ளார். இதைத் தனது 'நோட்டா' படத்தின் தெலுங்கு வெர்ஷன் பட புரமோஷனின்போது வெளியிட்டுள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட நிறுவனம் தொடங்குவதொன்றும் புதிதல்ல. இதுபோல பலபேர் தாங்கள் பிரபலமான துவக்க காலங்களில் நிறுவனங்களைத் துவங்கி இருந்திருக்கின்றனர். அந்த லிஸ்ட்டில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.