நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு!

கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்துதலில் ரூ.75 கோடியைத் தமிழக அரசு இழப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதற்காக 650 ஏக்கர் அளவிலான நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர்களுக்குத் தமிழக அரசு ரூ.1,500 கோடி இழப்பீடு வழங்குகிறது. இதில் முதற்கட்டமாக ரூ.75 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக நகராட்சி நிர்வாக அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான சாலையோரக் கண்காட்சி நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி பேசுகையில் மேற்கூறிய விவரங்களைத் தெரிவித்தார். ரூ.75 கோடிக்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் அத்தொகை இன்னும் 10 நாட்களில் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுவிடும் எனவும் அவர் உறுதியளித்தார். அதேபோல, மும்பை - பெங்களூரு தொழில்துறை விரிவாக்கத் திட்டத்தை கோயம்புத்தூர் வரையிலும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.