அமலா பாலுக்கு டப்பிங் ஃபீவர்!

‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் பணிகளின் ஊடே நடந்த சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார் நடிகை அமலா பால்.



ராட்சசன் படத்திற்கு பிறகு ஆடை, அதோ அந்த பறவை போல படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இரண்டுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள். இவற்றில் கே.ஆர்.வினோத் இயக்கும், அதோ அந்த பறவை போல படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார் அமலாபால். இது குறித்து, “எக்ஸாம் பீவர் போல் இது டப்பிங் பீவர். மைக் முன்பு நின்று ஒவ்வொரு காட்சிகளையும் சற்றும் மாறாமல் பேசி முடிப்பதற்குள், நடுக்கம், மன அழுத்தம், முகப்பரு எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் பயத்தை எதிர்கொள்ளத் தெரியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. இது, அதோ அந்த பறவை போல நேரம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.



செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கே.ஆர்.வினோத் . கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் நடிகை அமலா பாலுடன், முன்னணி நடிகர் ஆஷிஸ் வித்யார்தி, சமீர் கோச்சார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

துருவங்கள் பதினாறு, மன்னர் வகையறா, சுட்டுப்பிடிக்க உத்தரவு போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேக்ஸ் பேஜோய் இசையமைத்து வருகிறார். சமூக கருத்துக்களை சார்ந்து உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.