பயிற்சியைத் தொடங்கிய இந்தியா!

ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று (நவம்பர் 18) தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளது.


ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் டி20 தொடர் வரும் 21ஆம் தேதியன்று பிரிஸ்பேனில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய அணி இன்று தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளது. பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் வலைபயிற்சியில் ஈடுபட்டுவதைப் போன்ற புகைப்படங்கள் உள்ளதால் முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக இவர் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா; க்ருனல் பாண்டியா, தினேஷ் பாரதிக் ஆகியோருடன் கலந்துரையாடுவதைப் போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அதன் ட்விட்டர் பக்கத்தில், விராட் கோலி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருப்பதைப் போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

டி20 தொடருக்கு அடுத்தபடியாக இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலைட் மைதானத்தில் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.