‘தனி ஒருவன்’ இப்போ ‘பப்ளிக்’!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அடங்க மறு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


ஜெயம் ரவி, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள படம் ‘அடங்க மறு’. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். காவல் துறை கதைக்களத்தை மையமாகக்கொண்ட த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள், டீசர் சமீபத்தில் வெளியாகிக் கவனம் பெற்றன.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தில் ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் போன்ற சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகளைக் காவல்துறை எதிர்கொள்வதைக் குறித்த காட்சிகள் உள்ளன என ட்ரெய்லர் வாயிலாக அறியமுடிகிறது. ஒரு பக்கம் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டும், மனைவியை கொஞ்சிக்கொண்டும் இன்னொரு பக்கம் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் வலம்வருகிறார் ஜெயம் ரவி.

இதன் சில வசனங்கள் ஏற்கனவே பல போலீஸ் படங்களில் வந்திருந்தாலும் இப்படத்தில் எந்தமாதிரியான புதுமையை புகுத்தியிருக்கிறார்கள் எனும் விஷயத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராஷி கண்ணா முதன்முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சம்பத், மைம் கோபி, அழகம் பெருமாள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங் செய்ய சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநராக லால்குடி இளையராஜா பணியாற்றியுள்ள இப்படத்தை கிளாப் போர்டு தயாரிப்பு நிறுவனம் தமிழ் நாடு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி அடங்க மறு திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.