மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.


உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி.டெகிதெனிய, முர்டு பெர்னான்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் குறித்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மன்றில் முன்னிலையாகி இன்று தமது சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

எனினும், எதிர்மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாக முடியாத காரணத்தால் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் வேறொரு திகதியைக் கோரியிருந்தார்.

இந்நிலையில், மனுமீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கின் பின்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் வதியும் வாக்காளர் ஒருவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை, உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயலென மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

மனுதாரர் கோரிய இடைக்கால நிவாரணங்களில் ஒன்றான, மனு மீதான விசாரணை நிறைவடைந்து கட்டளையிடும்வரை யாழ்ப்பாண மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க உறுப்பினர் வி.மணிவண்ணனுக்கு தடை உத்தரவை வழங்கவேண்டும் என்பதை ஏற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் இடைக்கால தடை விதித்திருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தே மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.