மஹிந்த, ரணில், மைத்திரி தமிழர்களால் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்!

நிராகரிக்கப்பட வேண்டியவர்களில் ஒருவரை காப்பாற்றி அரசாங்கத்தின் அங்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள் எங்கள் மீது முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.


யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்கவேண்டும் என கேட்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது.

நாடாளுமன்றில் இன்று ஐ.தே.கட்சி 105 ஆசனங்கள் வைத்திருக்கின்றது. அதேபோல் பொதுஜன பெரமுன 96 ஆசனங்களை வைத்திருக்கின்றது.


ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காவிட்டாலும் கூட ஐ.தே.கட்சி அதிகபடியான ஆசனங்களை வைத்திருக்கின்றது.

இந்நிலையில், கூட்டமைப்பு விழுந்தடித்துக் கொண்டு ஆதரவு வழங்குவது ஏதோ மஹிந்த பெரும்பான்மையை பெற்றுவிடப்போகிறார். ஆகவே ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஐ.தே.கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பு காட்ட நினைக்கிறது.

மஹிந்த, ரணில், மைத்திரி ஆகிய 3 பேரும் தமிழர்களால் நிராகரிக்கப்படவேண்டியவர்கள். அந்த நிராகரிக்கப்படவேண்டியவர்களில் ஒருவருக்கு ஆதரவளிப்பதுடன், அவரை காப்பாற்றி அரசாங்கத்தின் அங்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள் எங்கள் மீது முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்து மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

கூட்டமைப்பு ஐ.தே.கட்சிக்காக இருக்கலாம், மஹிந்த தரப்புக்காக இருக்கலாம் நிபந்தனைகளை விதிப்பதையும், அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவளிப்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

காரணம் தமக்கு நெருக்கடி உண்டாகும் காலங்களில் இவர்கள் நாங்கள் கேட்கும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.

இது கடந்த 70 வருடகால வரலாறு. அந்த வரலாற்றை தெரிந்து கொண்டே நாங்கள் திரும்பவும் நிபந்தனைகளை விதிப்பது படு முட்டாள்தனமான செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எல்லாவற்றையும் செயலில் கண்டதன் பின் எங்களுடைய ஆதரவை தெரிவிக்கவேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka  #Jaffna #Press Meet #Gajendrakumar Ponnambalam  #Colombo  #Tamilarul.net

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.