மீ டூ: மோகன்லாலை சாடும் ரேவதி

மீ டூ ஹேஷ் டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களை வெளியில் சொல்லி வரும் இவ்வேளையில்,
திரைத்துறையில் இருப்பவர்கள் சொல்வதன் மூலம் இது பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த மீ டூ விவகாரங்களுக்கு முன்பே கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்திலிருந்து அங்குள்ள நடிகைகளில் சிலர் திரைத்துறைத் தாண்டி பெண்களுக்கு நிகழும் பாலியல் சீண்டல்கள் பற்றி பேசி வருகிறார்கள். இதனையடுத்து மீ டூ இயக்கமும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால், “இதை ஒரு இயக்கமாகக் கருதமுடியாது. இது ஒரு ஃபேஷன் ட்ரெண்ட்டைப் போன்றது. இந்த ட்ரெண்ட் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. திரையுலகில் மட்டும் நடப்பது அல்ல. மலையாளத் திரையுலகில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை” என்று மீ டூ இயக்கம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு மோகன்லாலின் பெயரை குறிப்பிடாமல் கருத்துத் தெரிவித்துள்ள நடிகை ரேவதி, “உணர்வுகளுடன் பேசுவதை சிலருக்கு எப்படிக் கற்று கொடுப்பது? ஒரு பிரபலமான நடிகர், மீ டூ என்பது ட்ரெண்ட் என்று சொல்கிறார். இயக்குநர் அஞ்சலி மேனன் சொன்னதைப் போல, செவ்வாய் கிரகத்திலிருந்து சமீபத்தில் வந்தவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் பற்றியும், அத்துமீறல்களை வெளியில் சொல்வதால் ஏற்படும் மாற்றங்களை பற்றியும் தெரியாது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரேவதி பகிர்ந்துள்ளார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஆதரவாக மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ இருப்பதாகப் புகார் கூறி வருகிறார் ரேவதி. நடிகைகள் பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோருடன் அவர் ஆரம்பித்துள்ள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு, மோகன்லால் மீதும் நடிகர் சங்கம் மீதும் தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில் இப்போது இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் ரேவதி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.