என் விலை 48 கோடி ரூபாய்!

ஜனநாயகம் பலவீனமாகும்போது பண நாயகம் கொழுப்பெடுத்து ஆடுவதை உலகம் முழுதும் இப்போது பார்க்க முடிகிறது. சில வருடங்களுக்கு முன் கூவத்தூரில் நடந்தது, இப்போது கொழும்பிலும் நடக்கிறது.


தாங்கள் எத்தனை கோடி ரூபாய்களுக்கு பேரம் பேசப்படுகிறோம் என்பதை இலங்கை நாடாளுமன்ற வளாகத்திலேயே எம்.பி.க்கள் போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இரவு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவைப் பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. அப்போது முதல் இலங்கையில் அரசியல் குழப்பம் தீவிரமாக இருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே கடுமையான முயற்சிகளில் இருக்கிறார்.

நேற்று (நவம்பர் 2) நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்தித்த 119 எம்.பி.க்கள், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும், ராஜபக்சேவின் பிரதமர் நியமனம் ஏற்கத் தக்கது அல்ல என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஒப்படைத்தனர். அப்போது வரும் நவம்பர் 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்ட இருப்பதாக தெரிவித்த சபாநாயகர் இது தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வருமென்று குறிப்பிட்டார்.

ஆனால், நேற்று மாலை இதை அதிபர் சிறிசேனாவின் அலுவலகம் நிராகரித்துவிட்டது. அரசுப் பேச்சாளரும் எம்.பி.யுமான கெஹலிய ரம்புகவெல்ல நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இது குறித்துப் பேசியபோது, “அதிபர் வரும் நவம்பர் 16 வரைக்கும் நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக முடக்கி வைத்திருக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாடாளுமன்றத்தை நவம்பர் 7 ஆம் தேதி கூட்டுவதாக சபாநாயகர் சொன்னதை அதிபர் ஏற்று அரசிதழில் வெளியிட்டால்தான் அது செல்லும். மாறாக சபாநாயகரே தேதியை மாற்ற முடியாது” என்றவர், “119 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் ராஜபக்சேவுக்கு எதிராக கொடுத்திருக்கும் கடிதத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. ரனிக்கு பெரும்பான்மை இருப்பதாக சொல்லி மக்களை தவறான திசைக்குத் திருப்புகிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் 119 எம்.பி.க்களும் ரனிலுக்கு ஆதரவாகக் குழுமிய வேளையில், மேலும் சிலரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று பேசப்பட்டது. அதனால் நாடாளுமன்றம் கூடும் தேதியை முடிந்தவரை இழுத்தடித்து அதற்குள் எம்.பி.க்களை பேரம் பேசி ராஜபக்சேவுக்கு ஆதரவாக மாற்றும் ஏற்பாடுகளும் தீவிரமாக நடக்கின்றன. இதை இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ரனிலின் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. பலித ரங்கே பண்டாரா தனது ஸ்மார்ட் போனை செய்தியாளர்களிடம் காட்டியபடி பேசினார்.

அவருக்கு வந்த அந்த குறுஞ்செய்தியில், “Dear sir both can be do what u ask from me today morning’ என்று இருந்தது.

இது குறித்து விளக்கம் அளித்த பண்டாரா, “அவர்கள் என்னை அணுகி தங்களுக்கு ஆதரவு அளித்தால் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 48 கோடி ரூபாய்) அளிப்பதாகவும், அமைச்சர் பதவி அளிப்பதாகவும் கூறினார்கள். கொழும்புவில் இருக்கும் ஒரு புத்தர் கோயிலில் வைத்து காலையில் பணம் கொடுக்கப்படும் என்றும், மாலையிலேயே அமைச்சராகப் பதவி ஏற்கலாம் என்றும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால் நானோ அந்தப் பணத்தை அனமதுவா பகுதியில் இருக்கும் என் வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்தால் இந்த வேண்டுகோளைப் பரிசீலிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு பதிலாகத்தான் எனக்கு இந்த மெசேஜ் வந்திருக்கிறது” என்று கூறினார் பண்டாரா.

மேலும் அவர், “ இலங்கையின் இப்போதைய சூழல் இதுதான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவிலான விலை கொடுத்து வாங்கப்படுகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்” என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ரனில் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரஞ்சன் ராமநாயக, “ராஜபக்சேவுக்கு ஆதரவாக சீனாவின் தலையீட்டில்தான் இந்த பேரங்கள் நடைபெறுகின்றன” என்று குற்றம் சாட்ட, அதற்கு சீனா கடுமையாக மறுப்பு தெரிவித்தது. “இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது எங்களின் கொள்கையாகும்” என்று சீன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பண மதிப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் எம்.பி.யின் தொகை கடுமையாக அதிகரிக்கிறது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.