பகிரப்படாத பக்கங்கள் நூல் வெளியீட்டு விழா அழைப்பு.!

“மாவீரர்கள் “ எம் மனங்களில் நீறாத நெருப்பாக பூத்து இருப்பவர்கள். தமிழீழ தேசத்தின் சொல்ல முடியாத துயரங்களை தம் தோழ்களில் சுமந்து இருளகற்றும் வெளிச்சங்களாக மண்ணுக்குள் வாழ்பவர்கள். அவர்களை தமிழீழ தேசம் மறந்து விடவும் முடியாது, மறுத்து விடவும் முடியாது.


இவர்கள் யார் ? எதற்காக வீரவேங்கைகளாக விதையானார்கள்? என்று எதிர்காலச் சந்ததிகளுக்கு சொல்ல வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். அதன் பொறுப்புடமை இன்று வாழும் எம் சந்ததிக்கு இருப்பதை மறுக்க முடியாது. இல்லை எனில் வரப்போகும் சந்ததிகளுக்கு இவ் வீரவேங்கைகளை, இன்று சொல்வதைப் போல சிங்களதேசமும் அதனோடு இயங்கும் சர்வதேசமும் பயங்கரவாதிகளாக இனங்காட்டிவிட்டுச் செல்லும். இந்த ஆபத்தை நாம் களைந்தெடுப்பதற்கு எமது வீரவேங்கைகளின் தியாகங்களை ஆவணப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பை நாம் சுமக்க வேண்டியவர்கள் ஆகின்றோம்.

அதன் ஒரு வெளிப்பாடே
 “பகிரப்படாதபக்கங்கள்” இது வெறும் வார்த்தைகள் கோர்க்கப்பட்ட புத்தகம் அல்ல, தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றில் சொல்லப்படாத பல லட்சம் தியாகங்களின் உச்சத்தை தன் உள்ளத்தில் கொண்டது. அதில் சிலவற்றை இப்போது வெளிவரும் புத்தகம் தன்மீது சுமந்து வருகுறது. “தமிழ்லீடர் படைப்பகத்தின்” வெளியீடாக இப்புத்தகம் வெளிவந்தாலும் இதை எழுதி இருப்பவர் இ.இ.கவிமகன். தமிழீழத்தின் நெருப்பாற்றில் நீந்திக்கடந்த பல லட்சம் தியாகங்களை தன் எழுத்துக்களால் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கின்றார் எழுத்தாளர். நிச்சயமாக இப்புத்தகம் அடுத்த தலைமுறைக்குப் பல உண்மை நிலைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

யேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து இப் புத்தகம் வெளிவர இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வரும் 18 ஆம் நாள் (18.11.2018) காலை 9.30 மணியளவில் ஸ்ருட்காட் நகரில் உள்ள Gemeinde Halle, Ludwig Str 41, 70176 Stuttgart  என்ற முகவரியில் நிகழ்வு இடம்பெறும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக இப்புத்தக ஆசிரியர் திரு கவிமகன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை பதிவேற்றியிருக்கிறார். அதில்,

அனைவருக்கும் வணக்கம்,
எனது நீண்ட நாள் கனவு, ஆசை நிறைவேறும் தருணம் வந்துள்ளது. வருகின்ற 18 ஆம் திகதி எமக்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களின் தியாகம் நிறைந்த வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் பெரும் பணியாக இதை செய்திருக்கிறேன். “பகிரப்படாதபக்கங்கள் “ என்ற இப்புத்தகம் யேர்மனியின் ஸ்ருட்காட்  நகரில் வெளியிடப்பட இருக்கிறது. இப்புத்தக வெளியீட்டில் அனைவரும் பங்கெடுத்து எனது இம் முயற்சிக்கு பலம் சேர்க்க வேண்டும் என்று உங்களை அன்புரிமையோடு வேண்டுகிறேன். எமக்காக தம்மை தியாகித்த வேங்கைகளை மனம் நிறுத்தி இப்புத்தக வெளியீட்டுக்கு கட்டாயம் வருகை தாருங்கள். வெளியில் சொல்லப்படாத பல கதைகள் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவாகி இருக்கிறது. இது நிச்சயமாக உங்களுக்கு புது வரலாறுகளை கூறும் என்று நம்புகிறேன்.

அன்பானவர்களே...!
இத்தேசக் கடமைக்காக பல தடைகளை தாண்டி பயணித்து வருகின்றேன். மிக கடினமான பாதையை தாண்டி வருகின்றேன். இதற்கு தங்களின் ஒத்துழைப்பு கட்டாயம் எனக்கு தேவை. மன நிறைவோடும் அன்புரிமையோடும் தங்களை அழைக்கின்றேன் வாருங்கள் உங்கள் கரங்களை என்னோடு இணைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி

எனத் தெரிவித்திருக்கிறார்.

இது மாவீரர்களின் நினைவுகளை சுமந்த மாதம் இம்மாதத்தில் வெளிவர இருக்கும் இப்புத்தத்தின் ஊடாக அவர்களை வெளியுலகுக்கு கொண்டுவர முயலும் கவிமகனையும் அவர் சார்ந்த அணியையும் மனநிறைவுடன் நோக்குவதோடு அனைவரும் அவர்களின் கரங்களை பற்றி அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தவறாது இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படியும் எமது ஊடகம் உங்களை அன்புரிமையோடு வேண்டுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.