மூலிகை மருந்துகளுக்கு வலுக்கும் தேவை!

ஆயுஷ் மருந்துகளுக்கு உலக அளவில் தேவை வலுப்பெற்றுள்ளது.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருந்துகள் மற்றும் சேவைகளில் தனது சந்தைப் பங்கை மூன்று மடங்கு உயர்த்தி 10 பில்லியன் டாலராக அதிகரிப்பதற்கு ஆயுஷ் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்திய தொழில் துறை கூட்டமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில், ஆயுஷ் மருந்துகளின் தற்போதைய சந்தைப் பங்கு 3 பில்லியன் டாலராகும்.

அக்டோபர் 11ஆம் தேதியன்று இந்திய தொழில் துறை கூட்டமைப்பு டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் செயலாளரான வைத்திய ராஜேஷ் கொடெச்சா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சந்தைப் பங்கை 10 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆயுர்வேதத்தை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்துவதற்கு ஆயுஷ் அமைச்சகம் முயற்சி எடுத்துவருகிறது.

ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 15.38 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆயுஷ் மருந்துகள் மற்றும் மூலிகைப் பொருட்களுக்கு உலகளவில் தேவை வலுத்துள்ளதால் அவற்றின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 2014-15ஆம் ஆண்டில் 354.68 மில்லியன் டாலரிலிருந்து 2016-17ஆம் ஆண்டில் 401.68 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.