தீபாவளி - தித்திக்கும் ஒளி-ஒலி சங்கமம்!

தீபத்திற்கு ஹிந்துக்கள் பண்டிகை நாட்களில் மட்டுமல்ல தினசரி வாழ்விலேயே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதற்கு காரணம் தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து வருகின்றனர் என்ற நம் ஐதீகமே.


இந்த நல்ல தருணத்தில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னணியைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

ஒரு மனிதனின் மரணத்திற்கா இத்தனை ஒலி - ஒளிகொண்டாட்டங்கள் என்கிற கேள்வி எழலாம்.அதற்கு முதலில் நாம் நரகாசுரன் யார் என்று தெரிந்துக் கொள்வது அவசியம்.

தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரத்தை மஹாவிஷ்ணு எடுத்தபோது அவருக்கும்,பூமாதேவிக்கும் மகானாக பிறந்தவன் தான்  நரகாசுரன். ஆரம்பத்தில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான்.

அவன் வளர வளர தன்னுடைய அசுர குணதிற்கே உரித்தான அம்சத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான்.தவத்தில் சிறந்த மகரிஷிகள்,குருமார்கள் போன்றவர்களை இகழவும் செய்தான்.

ஈரேழு லோகங்களையும் வென்று விட வேண்டும் என்று எண்ணிய அவன், பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரியத் தொடங்கினான். பிரம்மாவும் அவன் தவத்தை மெச்சி, “உன் தவத்திற்கு மெச்சினேன், என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். “எனக்கு சாகா வரம் அருளுங்கள்” என்று கேட்டான்.


அதற்கு பிரம்மா, உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்”என்றார். ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது என்ற வரத்தை நரகாசுரன் கேட்டான்.

நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய் என்று பிரம்மாவும் வரம் அளித்தார். சாகா வரம் கிடைத்த நரகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது. எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆவல் கொண்டு தேவர்களைச் சிறையில் அடைத்தான்.


மிஞ்சிய சிலர் கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த கிருஷ்ணர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார்.

நரகாசுரன் அதற்கு செவி சாய்க்காததால்,போர் ஆரம்பித்தது. வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள் என்பதால், தனக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார்.கடும்போரில், நரகாசுரன் தன் கடாயுத்தை  கிருஷ்ணணரை நோக்கி வீச, அதில் காயம்பட்டு மயங்கி விழுவது போல் மாயக் கண்ணன் நடித்தார்.

கிருஷ்ணன் மயங்கி விழுந்ததுப் பார்த்த சத்தியபாமா கோபத்தில், நரகாசுரன் மேல் சரமாரியாக அம்பை எய்ய அவனும் கீழே சாய்ந்தான்.அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்து, அவனுக்குத் தேவையான வரத்தைக் கொடுப்பதாகச் கூறினார்.

இறக்கும் தருவாயில் அகங்காரம் அழிந்தது மட்டுமின்றி, கிடைத்தற்கரிய விஷ்ணுவின் அவதார கோலத்தைக் கண்டு மனம் திருந்திய நரகாசுரன், தான் இறக்கும் இந்த நாளை எல்லோரும் காலையில் எழுந்து குளித்து , புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

இதுவே ஹிந்க்கள் தீபாவளி கொண்டாடு வருவதற்கு காரணம்.

தீபாவளித் திருநாளில் மட்டுமல்ல என்னாலும் நம் மனதில் இருக்கும் அசுர குணங்களை கைவிட்டு ஞான வாழ்வை நோக்கி பயணிப்போம் என்று இந்நன்னாளில் உறுதியேற்போம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.