2.o: ரஹ்மான் வியந்த காட்சி!

2.o திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘2.o’ இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் 3D டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சென்ற 3ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு இசை அமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், ‘2.o’வின் ஆறாவது ரீல் காட்சிகளுக்கான மிக்சிங் வேலைகளை செய்து வருகையில், அந்த காட்சிகளை பார்த்து வியந்து அது குறித்து ட்விட் செய்துள்ளார். அதில், “2.o படத்தின் 6-வது ரீலுக்கான இசையில் மிக்ஸ் செய்து கொண்டிருக்கிறேன். ஓ மை காட்... உணர்வுப்பூர்வமான சயின்ஸ் ஃபிக்‌ஷன் சகாப்தம் என்பேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் தான் பணியாற்றும் படங்களின் பாடல் வெளியீட்டுத் தேதி, டிரெய்லர் வெளியிட்டு தேதி போன்றவற்றை குறிப்பிட்டு ட்விட் செய்வது வழக்கம். ஆனால் தான் பணியாற்றும் படங்களில் இடம் பெறும் காட்சிகள் குறித்து எந்தத் தகவலையும் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டதில்லை. அந்த வகையில் ‘2.o’ படத்தின் காட்சிகள் குறித்து இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் அக்‌ஷய் குமார், நீரவ் ஷா என பெரும் கூட்டணி அமைந்துள்ள ‘2.o’ படம் 550 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.