இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றி!

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற
தொடர்களில் முதன்முறையாக முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 250 ரன்களும் ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 323 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மார்ஷ் 31 ரன்னுடனும் ட்ராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 219 ரன்கள், இந்திய அணி வெற்றி பெற 6 விக்கெட்டுகள் கைப்பற்ற வேண்டும் என்ற நிலை இருந்தபோது வெற்றி இரு தரப்பினருக்கும் சம அளவில் இருப்பதாகவே பலருக்கும் தோன்றியிருக்கும். ஆனால், கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தால் இந்திய அணி இரு விக்கெட்டுகளை கைப்பற்றினாலே வெற்றியை உறுதிசெய்துவிடும் சூழல் இருந்தது. ஏனெனில் பத்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கும் வீரர்கூட இலக்கை விரட்டி கவனமாக ஆடுவார் எனும் நிலை இப்போது ஆஸ்திரேலிய அணியில் இல்லை. அதை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உணர முடிந்தது.
மார்ஷ் அரை சதம் கடந்து 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். தன் விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய டிம் பெயின் 41 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை ஜஸ்ப்ரீத் பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடிக்குள்ளானது.
தோல்வியைத் தவிர்க்கக் கடுமையாகப் போராடிய மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் இருவரும் தலா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் நேதன் லயன் மட்டும் விடாமல் போராடியதால் இறுதி நேரத்தில் பரபரப்பு காணப்பட்டது. மறுமுனையில் ஆடிய ஹாசில்வுட் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 291 ரன்களில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.