காற்றில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது: வைகோ

சென்னையில் திருமாவளவனை சந்தித்த பிறகு, பேட்டியளித்த வைகோ திமுகவுடன் எந்த நெருடலும் இல்லை. காற்றில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
அண்மையில் புதிய தலைமுறை நேர்காணலில், ‘தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்குத் திராவிட இயக்கங்கள் ஆற்றிய பணி’ பற்றிய கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோதே பேட்டி முடியும் தருவாயில் தானாகவே அந்தப் பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார் வைகோ. இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் வன்னியரசு தனது முகநூல் பக்கத்தில் சில கருத்துகளை கூறினார். வைகோவின் பேச்சில் நில பிரபுத்துவ, ஆதிக்க உளவியல் வெளிப்பட்டதாகக் குறிப்பிட்டார் வன்னியரசு.
இந்தக் கருத்தையடுத்து 2006ஆம் ஆண்டு தேர்தலின் போது விசிக கட்சிக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக வைகோ தெரிவித்திருந்தார். இதனால் திமுகவுடன் நெருக்கமாக இருக்கும் மதிமுக மற்றும் விசிக இடையே அசாதாரண சூழல் நிலவியது.
வைகோ, திருமா இருவருக்கும் இடையேயான கருத்து மோதலைத் தொடர்ந்து, இன்று (டிசம்பர் 11) மதியம் 12 மணியளவில், சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய வைகோ, மோடி அரசுக்கு எதிராக அலை வீசுகிறது.
ஜனநாயகம் காக்கப்படும் என 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தல் முடிவுகள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. திமுகவுடன் எந்த நெருடலும் இல்லை. காற்றுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய திருமாவளவன், வைகோ சூது, சூழ்ச்சி கள்ளம் இல்லாதவர். கூட்டணி அமையும் முன்னே சிலர், திமுக உடையும் என்று கூறி வருகின்றனர். ஆனால் என்னாலும் வைகோவாலும் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கமளித்தார்.5

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.