பெண் கடத்தல் பற்றி உருவாகும் புதியதிரைப் படம்!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்கொடுமைகளும், பெண்கள் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. பெண்கள் கடத்தல் பின்னணி குறித்து ஆய்வு செய்து ‘பட்டறை’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார் பீட்டர் ஆல்வின்.
சிறிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்கினாலும் 70 நாள்கள் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பீட்டர் ஆல்வின் இயக்குவதோடு இந்தப் படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார்.
தான் தேர்ந்தெடுத்த கொண்ட கதை குறித்தும் அதற்கான தனது முன் தயாரிப்புகள் குறித்தும் பீட்டர் ஆல்வின் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். “இந்தக் கதை குறித்து ஆழமாக ஆய்வு செய்தேன். இது குறித்து பல இடங்களுக்குப் பயணம் செய்து பலரிடமும் விஷயங்களைக் கேட்டறிந்தேன். நகர்ப்புறம் சார்ந்த கதையாக இருந்தாலும் உலகம் முழுவதும் நடைபெறும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 18 வயதுக்கும் குறைவான பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்” என்று கூறினார்.
“பெண்கள் கடத்தலின் பின்னால் ஒரு நெட்வொர்க் இயங்குகிறது. சென்னையில் காணாமல் போகும் பெண்கள் மும்பை கொண்டு செல்லப்படுகின்றனர். உணவு கொடுக்கப்படாமல் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். உடல் ரீதியாகத் தாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் மாஃபியா கும்பலுக்குப் பின் போதைப் பொருள்கள், ஆயுதங்கள், பெண் கடத்தல் ஆகியவை இருக்கும். இந்தியா முழுவதும் பெண் கடத்தலில் வருடத்திற்கு 500 கோடி ரூபாய் வியாபாரம் நடைபெறுகிறது” என்று கூறினார்.
பெண் கடத்தல் பற்றி படம் எடுக்கும் பீட்டர் ஆல்வின் எந்த இடத்திலும் ஆபாசமான காட்சிகளை அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். “குத்துப்பாடல் இந்தப் படத்தில் இல்லை. பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் ஷாட்டுகள் இதில் இடம்பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஜே.டி.சக்ரவர்த்தி, ரேணுகா, செந்தில், ராட்சசன் படத்தில் நடித்து கவனம் பெற்ற வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.