பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளிக்க 5 வழிகள்

டெலோகன் எஃப்ளூவியம், இது எதோ பயங்கரமான பாதிப்பு போல தோன்றலாம், ஆனால், முதல் பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த அதீத முடி உதிர்வு, ஓராண்டு வரை நீடிக்கும்.


இது ஒரு பொதுவான நிகழ்வாகும். ஏனெனில், பிரசவ காலத்தில், அதிமுக்கியமான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் உள்பட அனைத்து ஹார்மோன்களின் சுரப்பும் உச்சத்தில் இருக்கும். பிரசவம் முடிந்ததும், இது, கிடுகிடுவென சரிவதே, முடி கொட்ட முக்கிய காரணமாகும். அதேசமயம், ஹார்மோன்களின் உச்சம் காரணமாக, பிரசவ காலத்தில் முடி கொட்டுவது தடைப்பட்டு, கூந்தல் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் காணப்படும். குழந்தை பிறந்ததுமே, கூந்தலில் இருந்த பளபளப்பு மங்கி, திடீரென கொட்ட தொடங்கும்.

இத்தகைய முடி உதிர்வு, குழந்தை பிறந்ததில் இருந்து, எந்த நாளில் வேணாலும், ஆரம்பித்து, ஓராண்டு வரை நீடிக்கக்கூடும். குழந்தை பிறந்த 4வது மாதத்தில் இப்பிரச்னை உச்சத்தை எட்டும். இந்த தற்காலிக முடி உதிர்வு உங்களுக்கு தொல்லை கொடுத்தால், பின்வரும் குறிப்புகளை பயன்படுத்தி, பிரசவத்திற்கு-முன் இருந்ததைப் போலவே, பளபளப்பான, அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்!

1. இயற்கையாக வாழ்வோம்!

உங்களின் தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொள்ளுங்கள். கைக்குழந்தை இருக்கும்போது, நீண்ட கூந்தலை பராமரிப்பது மிகக் கடினம். தலை வாரும்போது, மிக மென்மையாகச் செய்யுங்கள். தலை முடியை அழுத்தி வாரினால், வேர்ப்பகுதிகளில் தேவையற்ற எரிச்சல் ஏற்படும். ஒரு நாளில், 2 முறைக்கு மேலாக, தலை வார வேண்டாம். தலைமுடியை ஸ்டைல் செய்ய நவீன உபகரணங்களை பயன்படுத்தினால், தலையில் சூடு அதிகமாகி, ஏற்கனவே உடைந்துள்ள முடிகளை மேலும் பாதிக்க நேரிடும். தலைமுடி ஈரமாக இருக்கும்போது, எளிதில் உடையும் என்பதை மறந்துவிடாதீர். எனவே, பல் வைத்த சீப்புகளை பயன்படுத்தாமல், தலைமுடியை இயற்கையாக உலர விடுவதே நல்லது.

2. ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள்!

பிறந்த குழந்தைக்கு, தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்பதால், இந்த காலகட்டத்தில், நீங்கள் ஊட்டச்சத்தான உணவுதான் சாப்பிடுவீர்கள். ஆனாலும், தலைமுடிக்கு வலு சேர்க்கும் உணவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முட்டை, இறைச்சி மற்றும் பன்னீர் போன்றவற்றில் உள்ள புரதங்கள் இதற்கு நல்ல பலன் தரும். இரும்புச்சத்து, வைட்டமின் சி நிரம்பிய அடர் பச்சை நிற கீரைகள், பீட்டா கரோட்டின் உள்ள கேரட், ஒமேகா 3 அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் நிறைந்த மீன் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். முக்கியமாக, நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள். அவற்றில் உள்ள நிறமிகள், உயிர்ச்சத்துகள் தலை மயிர்க்கால்களை பாதுகாத்து, நன்றாக வளர ஊக்கம் தரும்.

3. ஆயுர்வேத வழியை பின்பற்றுவோம்!

நிரூபிக்கப்பட்ட பொருட்களான இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிருங்கா, வேம்பு கலந்த எண்ணெய் தடவி, உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால், தலை முடியின் வேர்ப்பகுதி பலமடைந்து, தனது அசல் மினுமினுப்பை திரும்ப பெறும். சீயக்காய், ரீத்தா போன்ற இயற்கையான பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் ஷாம்புவை பயன்படுத்துங்கள். பல நூறு ஆண்டுகளாக, தலைமுடிக்கு இயற்கை பொலிவூட்ட, இவற்றைத்தான் இந்தியர்கள் பயன்படுத்தி வந்தனர்.

4. வைட்டமின்களை மறந்து விடாதே!

பிரசவ காலத்தில், சீரான உணவுப்பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், வைட்டமின் மாத்திரைகள் உங்களுக்கு உதவக்கூடும். ஒட்டுமொத்த உடல்நலனை பாதுகாக்கவும், தலைமுடி உதிர்வை ஒரேயடியாக தடுத்து நிறுத்தவும் வைட்டமின்கள் நல்ல பலன் தருபவை. குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே, நீங்கள் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட்டு வந்திருந்தால், அவற்றை குழந்தை பிறந்த பிறகும் தொடரலாம். எதற்கும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

5. ஷாம்பு தேர்வு செய்வதில் கவனம் தேவை!

நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களில், பயோடின், சிலிகா போன்றவை கலந்திருக்க வேண்டும். அவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தலைமுடி உதிர்வு தொடர்ந்தாலும், அழகிற்காக, ஷாம்பு உபயோகிக்கலாம். ஆனால், நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு பிருங்கா, வேம்பு கலந்து தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான், தலைமுடியின் ஆரோக்கியம் நீடிக்கும்.

பிரசவத்திற்கு பிந்தைய முடி உதிர்வு நிரந்தரமாக இப்படியே இருந்துவிடாது. உங்களின் பெருமைமிகு கூந்தல் அழகு மீண்டும் உங்களைத் தேடி வர சிறகு விரித்து காத்திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.