பாடுநிலாவே - பாகம் 4

அவளது வார்த்தைகள் அவனைச் சிந்திக்கவைத்தது.
இந்தச் சின்ன வயதில் அவளுக்கிருந்த தெளிவும் அறிவும் தனக்கில்லையே என எண்ணி மறுகிப்போனான். மறுநாள் வகுப்பிற்குச் சென்றதும் அவளது பாடக்கொப்பியை நண்பர்களிடம் கேட்டான். பாடசாலையின் பின்பக்கம் உள்ள பாழும் கிணற்றில் எறிந்து விட்டதாக கூறியபோது அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது தான் பார்த்தான், அன்று சாதனா பாடசாலைக்கு வரவில்லை. கொப்பி இல்லாததால் தான் அவள் வரவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

வீட்டிற்குச் சென்றதும் தனது பாடக்கொப்பியை எடுத்து தனது பெயரை நீக்கிவிட்டு அதன் உறையை மாற்றி எடுத்துக்கொண்டு முகாம் நோக்கி நடந்தான். “அவளது வீட்டை எப்படி கண்டபிடிப்பது?” என எண்ணியபடி சென்றுகொண்டிருக்கும் போது தண்ணீர் எடுப்பதற்காக அவளே வரிசையில் நிற்பதைக்கண்டதும் அருகில் சென்று, சாதனாவிடம் கொப்பியைக் கொடுத்தான். அவள் எதுவும் கேட்பதற்குள் திரும்பி நடந்துவிட்டான்.

மறுநாள் பாடசாலை விட்டதும் அவனை அழைத்தபடி ஓடிவந்தவள், “இது யாருடைய கொப்பி,என்ர கொப்பி?” என்றாள்.
“அது---வந்து, உங்க கொப்பியை என்ர நண்பர்கள் தண்ணியில வீசிட்டாங்கள், அதனால என்னோட கொப்பியை தரவேண்டியதாப்போச்சு, பரவால்ல, வைச்சிருங்க” என்றான்.

“இல்ல, வேண்டாம், அப்பிடி செய்யிறது எனக்கு என்னவோ மாதிரி இருக்கு, நானே எழுதி எடுக்கிறன்” என்றாள்.
“சாதனா--- –அதுதானே உங்க பேர்?”
தலையை மேலும் கீழுமாக ஆட்டியவளிடம், “சாதனா. உங்களுக்கு படிப்பு தவிர வீட்லயும் ரொம்ப வேலை இருக்கு போல, எனக்கு அப்பிடி ஏதுமில்ல, நிறைய நேரம் இருக்கு, ஒரே விளையாட்டுதான், அந்த நேரத்தில எழுதி எடுத்திடுவன், இதைப்பத்தி யோசிக்காம வீட்டுக்குப் போங்க” என்றுவிட்டு விரைந்து நடந்தான்.

மேற்கொண்டு எதுவும் பேசமுடியாததால் சாதனாவும் முகாமிற்குச் சென்றுவிட்டாள். இதுதான் காங்கேசன்- சாதனா நட்பின் அடிக்கல்லாக அமைந்தது. அதன் பின்னர் முகாமிற்கு கமிஷன் கொடுக்கச்செல்லும் போதெல்லாம் சாதனா வீட்டிற்குச் சென்று அவளோடு கதைத்துவிட்டு வருவதுண்டு. சாதனாவும் பாடத்தில் எற்படும் சந்தேகங்களை அவனிடம் கேட்டே தெளிவுபடுத்திக்கொள்வாள். அவ்வாறே அவனும் செய்வதுண்டு. காங்கேசன் தன் தாயாரிடம் சாதனாவைப்பற்றி கதைகதையாக சொல்லுவான்.
நாட்கள் நகர்ந்தபோது இருவரும் மேல்வகுப்பிற்குச் சென்றனர். நல்ல நட்பின் நூலொன்று இருவரையும் இறுக்கமாக கட்டியிருந்தது. நண்பர்கள் கிண்டலும் கேலியும் செய்தபோதும் அவன் அதனைப் பொருட்படுத்தவே இல்லை. அவ்வேளையில் தான் சாதனா தனது குடும்பம் பற்றிய பல விடயங்களை அவனோடு பகிர்ந்துகொண்டாள். அவளிடம் உள்ள ஒருவித கடினத்தின் காரணம் அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.
“அப்பா ஈழவேந்தன், அம்மா தேன்மொழி, எனக்கு ஒரே ஒரு அண்ணா மட்டும்தான்,” என்றாள்.
“அண்ணாவா, எங்கே?, நான் பார்த்ததே இல்லை?” என்ற காங்கேசனை தனது அமைதியான பார்வையால் அடக்கியவள், மேலே தொடர்ந்தாள்.
“என்ர அண்ணாவின்ர பெயர் கரிகாலன், சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியான கரிகாலச் சோழனின் பெயரையே அம்மா விருப்பப்பட்டு அண்ணாவுக்கு வைச்சதா அப்பா அடிக்கடி சொல்லுவார்”
“அளவான வருமானம். அமைதியான வாழ்க்கை என்றிருந்த எங்கட குடும்பம் எனக்கு ஏழு வயசா இருக்கிற போது சிதைஞ்சு சின்னாபின்மாப்போச்சுது” பெமூச்சோடு சொன்னவளை ஆச்சரியமாய் பார்த்த காங்கேசனை பார்க்க இயலாது தலை கவிழ்ந்து கொண்டாள் சாதனா.


தொடரும்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.