குழந்தைத் திருமணம்: முதலிடத்தில் சென்னை!

2017ஆம் ஆண்டில் மட்டும் 1,636 குழந்தைத் திருமணங்கள் அரசால் தடுத்துநிறுத்தப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து குழந்தைகள் நலத்திற்கான இந்திய ஆணையம் மற்றும் யுனிசெப் சென்னைஅமைப்பு இணைந்து ஆய்வு நடத்தியது. அதில், 2017ஆம் ஆண்டில் தடுத்து நிறுத்தப்பட்ட 1,156 குழந்தை திருமணங்கள் அவர்களது ஒப்புதலின்றி நடத்தப்பட்டவை. அவர்களது வயது சராசரியாக 16 ஆக உள்ளது. குழந்தை திருமணத்திற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியால் 33 சதவிகிதம் பேருக்கும், காதல் திருமணத்தைத் தவிர்ப்பதற்காக 17 சதவிகிதம் பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அச்சம் காரணமாக 11 சதவிகிதம் பேருக்கும், குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை காரணமாக 11 சதவிகிதம் பேருக்கும், காதலித்துத் திருமணம் செய்ததாக 95 சதவிகிதம் பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் தரித்ததால் 1 சதவிகிதம் பேருக்கு திருமண ஏற்பாடுகள்செய்யப்பட்டதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு இந்தியாவில் 18 லட்சம் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதில், உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், பிகார் இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதற்கடுத்தபடியாக, தமிழகத்தில் மட்டும் மொத்தம் 62,500 திருமணங்கள் நடந்துள்ளன. தமிழக அளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். கடந்தாண்டில் சென்னையில் மட்டும் 5,480 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. சென்னையில் புதிதாகக் குடியமர்த்தப்பட்டுள்ள இடங்களில்தான் திருமணம் அதிக அளவில் நடந்துள்ளன. இதேபோல, கோவையில் 3,025 பேருக்கும் மதுரையில் 2,840 பேருக்கும் குழந்தைத் திருமணம் நடந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நேஷனல் ஹெல்த் மிஷன் இயக்குநர் மற்றும் குழந்தைகள் நலத் துறை ஆணையர் தரேஸ் அஹமது கூறுகையில், “16 வயது முதல் 18 வரை உள்ள பதின்பருவப் பெண்களில் பெரும்பாலானோர் கர்ப்பம் தரித்துள்ளனர். இதில் அதிகமானவர்கள் திருமணமானவர்கள். இதன் மூலம் தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் திருமணம் நடந்துள்ளது தெரிகிறது” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.