மீன் கடைகள் அகற்றம்: மனு அளித்தால் விசாரணை!

மெரினா கடற்கரையில் இருந்து கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் மற்றும் வணிகர்கள் முறைப்படி மனுதாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என
சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூபாய் 4,500க்குப் பதிலாக தினமும் 500 ரூபாய் என மீன்பிடி தடைக் காலமான 65 நாட்களுக்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியை இணைத்து மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் மற்றும் மீனவர்கள் வியாபாரம் செய்வதற்கான மாற்று இடம் வழங்குவது குறித்துமாநகராட்சி ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை (டிசம்பர் 21) மீண்டும் விசாரணை செய்தது நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு. அப்போது, மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் தூய்மைப்படுத்தும் பணிகள் மட்டும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மெரினாவில் கடை நடத்துபவர்கள் சங்கம் சார்பாக முறையிடப்பட்டது. “மெரினாவை ஒழுங்குபடுத்துகிறோம் என்றும் தூய்மைப்படுத்துகிறோம் என்றும் கூறி, எங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்கின்றனர். அதற்குத் தடை விதிக்க வேண்டும்” என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தங்களைக் கட்டாயப்படுத்தி எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.