ரஃபேல் விமானத்தைத் தயாரிக்க முழுத் திறனும் உள்ளது

ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்க, கர்நாடகாவில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்துக்கு முழுத் திறனும் உள்ளது என்று அதன் தலைவர் கே.மாதவன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கான விலை முந்தைய அரசு மேற்கொண்ட ஒப்பந்த விலையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும், பொதுப்பணித் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தைத் தராமல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
ரஃபேல் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறிவிட்டதாகவும், மத்திய அரசு கூறியபடி சிஏஜி அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவிடம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்து வருகிறது. இதனால் இரு கட்சிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
ரஃபேல் விவகாரங்களை மையப்படுத்தி, காங்கிரஸ் அலுவலகம் முன்பு பாஜகவினரும், பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸாரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி கோவா பானஜியில் பாஜகவினர் நேற்று (டிசம்பர் 21) போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பாஜகவினருடன் மோதலில் ஈடுபட்டனர். மோதலைத் தடுக்க முயன்ற போலீசாருடனும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இப்படித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பொருளாக இருந்து வரும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவன தலைவர் மாதவன் கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் பொறியாளர்கள் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், ”தாங்கள், ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் திறனைக் கொண்டிருப்பதாகவும், விரைவான கொள்முதல் என்ற திட்டத்தின் கீழ், 36 விமானங்களை வாங்க, மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.