அனர்த்தத்தில் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினருக்கு வேலைவாய்ப்பு

கிளிநொச்சியில் அனர்த்தத்தின் போது உயிரிழந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பினைப்
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாயப் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்று பார்வையிட்ட அவர், அதன் பின்னர் பெரியகுளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது ஏற்பட்ட மின் ஒழுக்கினால் உயிரிழந்த குடும்பஸ்தரின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்தார்.
அத்தோடு குறித்த குடும்பஸ்தரின் இழப்பால், அந்தக் குடும்பத்தின் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அக்குடும்பத்தின் வருமானத்திற்காக ஒருவருக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு தான் முழுமுயற்சிகளையும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி-கண்டாவளை பெரியகுளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது ஏற்பட்ட மின் ஒழுக்கினால் 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.