தமிழ் மக்களை பணயம் வைத்து அரசியல் நடத்த வேண்டாம் !

தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்த வேண்டாமென யாழ்ப்பாண ஆயர்
மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு தமிழ் மக்களின் நலனுக்காக அரசியல் இலாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடமும், அரசியல் கட்சிகளிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஆயரால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியிலையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘’ தேசிய ஜனநாயக முன்னனி உதயமாகி நிறைவேற்று அதிகாரத்திற்கு முடிவு கட்டவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். இலங்கை நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் நீதியான சமத்துவமான அமைதியான வாழ்வு கிடைக்க அனைத்து அரசியல்வாதிகளும் உழைக்க வேண்டும். தனிப்பட்ட அதிகாரம் பதவி பட்டம் என்பன இங்கு முக்கியமல்ல.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் இலங்கை நாட்டை அச்சுறுத்திய அரசியல் முறுகல் நிலை ஓரளவு சுமூகமாக தீர்ந்துள்ளதால் ஜனநாயகம் வென்றுள்ளது.
ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி ஒரு முடிவல்ல, மாறாக இது ஒரு ஆரம்பமே. எதிர்பார்த்து நம்பி இருந்த அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படாமலே முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு நீதியாக செயற்படும் என நம்பி ஏமாந்து விட்டோம்.
ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் விலை போகாத வகையில் நாம் இன்று முன்பைவிட அரசியற் பலம் மிக்கவர்களாகவே உள்ளோம்.
தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண இக்காலத்கைவிட மிக சிறந்த காலம் வேறு இல்லை. இந்தநிலை தமிழ் மக்கள் இலங்கையின் பல பகுதிகளில் போர்க்காலத்தில் அனுபவித்த கோர அனுபவங்கள் வழியாகவே வந்தது .
இப்போது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டு எட்டப்படாத எந்த முடிவும் வருங்காலத்தில் எட்டப்படும் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை.
இலங்கை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் வாழ்கின்றன என்பதை உறுதிப்படுத்தி அவர்களின் சம உரிமையோடு வாழக்கூடிய கூடிய சுதந்திர வாழ்விற்கான நீதியோடு கூடிய நிரந்தர தீர்வைக் கொண்டு வரக்கூடிய மாற்றப்பட முடியாத புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான செயற்பாட்டிற்காக அரசியல்வாதிகள் மட்டுமலல சம்மந்தப்பட்ட அனைவரும் கண்டிப்பாக பயணியாற்ற வேண்டுமென அழைப்புவிடுக்கிறோம்.“ என்றும் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.