ஜெ.மரணத்திற்குக் காரணம் திமுகவும், காங்கிரஸும்தான்: தம்பிதுரை

“ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான்” என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிறகு கரூரில்  (டிசம்பர் 25) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் அவர் மீது திமுக தொடர்ந்த வழக்குதான். கலைஞரும், ஆர்.எஸ்.பாரதியும்தான் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளினார்கள். அதற்கு உடந்தையாய் இருந்தது காங்கிரஸ். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது மிகவும் சிரமப்பட்டார். ஆனால் அப்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஜெயலலிதா வழக்கை எதிர்த்து மேல்முறையீட்டுக்கும் சென்றது. அந்த உளைச்சல் மற்றும் பாதிப்பின் காரணமாகத்தான் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே ஜெயலலிதா இறந்ததற்கு முழுக் காரணமும் திமுகவும் காங்கிரஸும்தான்” என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவில் பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தேகம் எழுப்பப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் சசிகலாவும் அவரது குடும்பத்தினருமே என்று எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவருகின்றனர். ஆனால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் திமுகவும் காங்கிரஸும்தான் என்று தம்பிதுரை வேறு விதமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.