எமது கடமைகளை நாம் எமது கட்சி ரீதியாகச் சுறுசுறுப்புடன் செய்வோம்

தற்காலிகமான நிலையைக் கடந்து செல்லவே வெள்ளத்தினால் பாதிக்கப்பபட்டுள்ள மக்களுக்கு
நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ள வட மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி வி விக்னேஸ்வரன் நிவாரணங்களுடன் நின்று விடாமல் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலை வரவேண்டும் என்றும் தன்னம்பிக்கை மற்றும் சுய முயற்சிகளால் அவர்கள் உயர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கிளிநொச்சி மயில்வாகனபுரம் இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று புதன் கிழமை வெள்ள நிவாரணம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் போரின் நிமித்தம் மோசமாகப் பாதிக்கப்பட்டு அவற்றின் தாக்கங்களில் இருந்து விடுபட முன்னர் இயற்கையின் சீற்றம் மீண்டும் எம் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்திருப்பது எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
யுத்த காலங்களில் பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்தது போல மீண்டும் பல்லாயிரக்கணக்கில் அவர்கள் இடம்பெயர நேர்ந்துள்ளது. தமக்குக் கிடைத்த சொற்ப உதவிகள் மூலம் சிறுகச் சிறுக அவர்கள் கட்டி எழுப்பிய வாழ்வாதார செயற்பாடுகளை மழை வெள்ளம் சின்னாபின்னமாக்கியுள்ளதாக அறிந்து மனவருத்தம் அடைந்தோம். அவர்கள் துயரங்களைத் தீர்ப்பதற்கு எம்மால் முடிந்தளவுக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். சென்ற முறை அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2015ல் எமது அமைச்சர் ஐங்கரநேசன் ஊடாக நிவாரணங்கள் வழங்கி இருந்தோம். இன்றும் வழங்குகின்றோம். தொடர்ச்சியாக நாங்கள் அவர்களுடன் இருப்போம்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேலும் உலர் உணவுகளை வழங்க உத்தேசித்துள்ளோம். தற்காலிகமான அவர்களின் இன்றைய நிலையைக் கடந்து செல்லவே எமது நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் நிவாரணங்களுடன் நின்று விடாமல் அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலை வரவேண்டும். அதற்கு தன்னம்பிக்கை அவசியம். சுய முயற்சிகளால் உயர வேண்டும் என்று அவர்கள் நினைப்பது அவசியம்.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த வெள்ளம் காரணமாக பெரும் தோற்று நோய், தொற்றா நோய் ஆபத்தும் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. இதுதொடர்பில் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி எத்தகைய முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஆராயவிருக்கின்றோம்.
அடுத்து மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் விவசாயம் அழிவடைந்துவிட்டது. கால் நடைகள் இறந்து விட்டன. வாழ்வாதாரங்கள் தடைப்பட்டுள்ளன. சில குடும்பங்களுக்கேனும் உலர் உணவுகள் கொடுத்திருப்பது தற்போதைய அவர்களின் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காகவே. இந் நிவாரணப் பணியில் யாழ் பல்கலைக்கழக மாணவ மாணவியரும் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து தங்கள் சேவையை வழங்கி வருகின்றார்கள். அத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அணியும் தங்கள் சேவையை வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எமக்குக் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் தேவையிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். திரு.றெஜி அவர்களின் தலைமையிலான எமது இளைஞர்கள் யுவதிகள் இதனை உறுதி செய்ய வேண்டும். அன்புடனும் பொறுப்புடனும் சுயநலம் களைந்து சேவை மனப்பான்மையுடன் நாம் உதவிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்.
இன்று திடீரென வந்த ஒரு தப்பான தகவலினால் அங்கிருந்து மக்கள் தலை தெறிக்க ஓட விழைந்ததைக் கண்டேன். உடையார்கட்டு அணை உடைந்து வெள்ளம் பாய்கின்றது என்ற தப்பான செய்தியைக் கேட்டு பலர் இங்கிருந்து வெளியேறி விட்டார்கள். ஆனால் விசாரித்துப் பார்த்ததில் அது தப்பான தகவல் என்று அறிய நேர்ந்தது. இவ்வாறான தருணங்களில் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
காலையில் கிளிநொச்சி பிரபந்தனாறு – மயில்வாகனபுரம் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் உதவிகள் வழங்கிய பின்னர் அதனைத் தொடர்ந்து மாங்குளம் மகாவித்தியாலயத்திலும் மற்றும் இரணைமடுவிற்கு அருகில் உள்ள இந்துபுரத்திலும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட எம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பராமரிக்கப்பட வேண்டியவர்கள். எமது கடமைகளை நாம் எமது கட்சி ரீதியாகச் சுறுசுறுப்புடன் செய்வோம். கட்டுப்பாட்டுடன் செய்வோம். மனித நேயத்துடன் செய்வோம். கொடைகள் யாவும் தேவையுடைய மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய நாங்கள் எம்மால் ஆன மட்டில் முயல்வோம். விரைவில் கட்சி ரீதியாக, உத்தியோகபூர்வமாக மக்கள் யாவரையும் சந்திப்பேன்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.