தேர்தலை தள்ளிப்போட சிலர் திரைமறைவு முயற்சி

மாகாணசபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் திரைமறைவு முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்தோடு எல்லை நிர்ணயம்,
பெண்களுக்களுக்கான பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை குறிப்பிட்டு தேர்தலை தள்ளிப்போட அரசு முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மக்களின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடச் சிலர்  முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனொரு அம்சமே சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற அரசின் அறிவிப்பாகும்.
கடந்த காலத்தில் நல்லாட்சி அரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஆட்சியில் எப்படி தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டு வந்தனவோ அதே பாணியில் புதிய அரசும் செயற்பட முன்வந்துள்ளதா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆறு மாகாண சபைகள் கலைக்கப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில் தேர்தல் பின்போடப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாகாண சபைகளில் ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை உள்ளது. எனவே, உடனடியாக அந்த மூன்று சபைகளின் ஆட்சியையும் கலைக்க முடியாது. அப்படி செய்வது ஜனநாயக விரோதம் என்றே பொருள் கொள்ளப்படும்.
இந்நிலையில் எல்லா சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது நிச்சயமாக காலதாமதம் செய்வதற்கான ஒரு வழிமுறையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, கலைக்கப்பட்டுள்ள ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை காலதாமதமின்றி நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான  போராட்டத்தில் சகல வழிகளை நாடவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.’ என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.