ராஜித சேனாரத்னவின் ஊழல் வெகுவிரைவில் அம்பலமாகும்
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன செய்துள்ள ஊழல்களை இன்று அல்லது நாளை அம்பலப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி (சிறிலங்கா பொதுஜன பெரமுன) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பத்தரமுல்லை நெளும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியின் தலைமையகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘‘முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஊழல்கள் செய்துள்ளார் என்று கூறிவரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த அரசில் சுகாதார அமைச்சராக இருந்போது பெரிய ஊழல்களில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பிலான தகவல்களை நாளை (இன்று) அல்லது நாளைமறு தினம் (நாளை) அம்பலப்படுத்தவுள்ளோம். எம்மிடம் அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
முடிந்தால் பேருவளை தேர்தல் தொகுதியில் இம்முறை அமைச்சர் ராஜித சேனாரத்ன வெற்றிப்பெற்றுக் காட்டட்டும். மகிந்த ராஜபக்சவுக்கு ஜம்பர் அணிவிக்க முயற்சித்தவர்களுக்கு நாம் ஜம்பர் அணிவிப்போம்’’ – என்றார்.
கருத்துகள் இல்லை