யாழில் தொடரும் திருட்டு சம்பவங்கள்

கடந்த சில நாட்களாக யாழில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரகின்றன.
அந்தவகையில், யாழ்.பருத்தித்துறை நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த இளைஞர் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீதி சோதனை நடவடிக்கைகளில்  பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளை, இளைஞர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் இன்னொரு துவிச்சக்கர வண்டியை இழுத்துக்கொண்டு வந்துள்ளார்.

அதன்போது குறித்த இளைஞரை பொலிஸார் சந்தேகத்தில் தடுத்து நிறுத்திய போது இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் வீதியில் கைவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தப்பியோடியவரை பொலிஸார் துரத்தி பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த துவிச்சக்கர வண்டியை களவாடி வந்தமை தெரியவந்துள்ளது.

அதையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் இடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் எனவும், தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டிகளை திருடி விற்று வந்ததும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், விசாரணைகளின் போது கூறிய தகவல்களை கொண்டு 09 துவிச்சக்கர வண்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபரை பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில்,  முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளிகளிடம் தங்க நகைகளை திருடிய குற்றசாட்டில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் மீண்டும் வைத்தியசாலையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் தங்க நகைகள் களவாடப்படுவது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றன.

அது தொடர்பில் வைத்தியசாலை வளாகத்தினுள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் (CCTV) உதவியுடன் நகைகளை திருடி வந்த பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் துணையுடன் வைத்தியசாலை நிர்வாகம் மடக்கி பிடித்து வீடியோ ஆதரத்துடன் யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒப்படைத்திருந்தனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வைத்தியசாலைக்கு வந்த வயோதிப பெண்ணொருவரிடமிருந்து சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது. அது தொடர்பில் குறித்த வயோதிப பெண் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.

அதனையடுத்து கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது , முன்னர் வைத்தியசாலையில் நகைகளை திருடிய குறித்த பெண்ணே மீண்டும் திருட்டில் ஈடுபடுவதை அவதானித்த நிர்வாகத்தினர் இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.