திருமணத்தில் வெடித்த வெடி: ட்விட்டரில் புகைந்தது!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்குமான காதல் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் கிசுகிசுக்கப்பட்டது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி ஜோத்பூரில் நடைபெற்ற திருமணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. திருமணத்தால் காதல் ஜோடி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாலும் ஒரு வாரக் காலம் கோலாகலமாக நடைபெற்றுவரும் திருமணக் கொண்டாட்டம் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.


தீபாவளிப் பண்டிகைக்கு நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது என்பதற்காக இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க வரைமுறை கொண்டு வரப்பட்டது. பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் நீதிமன்றத்தின் நடவடிக்கையை வரவேற்றனர். பிரியங்கா சோப்ரா அதற்கு முன்பாகவே பட்டாசுகளைத் தவிர்க்கக் கோரிக்கை வைத்தார்.

ப்ரீத் ஃப்ரீ என்ற அமைப்பின் விளம்பரத் தூதரான பிரியங்கா சோப்ரா ஆஸ்துமாவால் தானும் பாதிக்கப்பட்டதாக அறிவித்து பல்வேறு வீடியோக்கள் மூலம் விளம்பர நிகழ்ச்சிகள் மூலம் ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு கட்டமாக தீபாவளியை முன்னிட்டு ஆஸ்துமா நோயாளிகளின் நலன் கருதி பட்டாசுகளை தவிர்க்கக் கோரிப் பேசினார். அதற்குச் சமூக வலைதளங்களில் வரவேற்பும் கிடைத்தது.

ஆனால் பிரியங்காவின் திருமணத்தை முன்னிட்டு ஜோத்பூரில் அதிக அளவில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளினால் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறது.

“அதாவது... தீபாவளி பட்டாசுகள் மட்டும் பிரச்சினைகளை உண்டாக்கும், திருமண நிகழ்ச்சிகளில் வெடிக்கும் பட்டாசுகள் ஆக்சிஜனைக் கொடுக்கும்.”

“பிரியங்கா சோப்ராவின் ஆஸ்துமா திருமணத்திற்கு ஒரு நாள் முன்பாக குணமடைந்துவிட்டதாக நினைக்கிறேன்.”

“சத்தம் எழுப்பாத, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, ஆக்சிஜனைத் தரக்கூடிய உங்களது திருமணத்தில் வெடித்த பட்டாசுகள் எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?”

என்றெல்லாம் பிரியங்கா சோப்ராவிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.