2.0: வசூல் சாதனை அறிவிப்பின் பின்னணி என்ன?

ஏழு நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் 2.0 வசூல் செய்ததாக அறிவித்திருப்பதில் தமிழகத்தின் பங்கு என்ன ? நேற்று நாம் கூறியிருந்த 400 கோடி ரூபாய் சாத்தியமா என்பதை
பற்றிய ஆய்வுகளுக்குள் தென்னிந்திய ஊடகங்கள் ஈடுபடவில்லை.
மீடியாக்களின் செய்தி பசியை லைகா நிறுவனம் பயன்படுத்தி கொண்டது. இந்த செய்தியை வெளியிட்ட வட இந்திய ஊடகங்கள் இந்தி பதிப்பின் மொத்த வசூலை மட்டும் குறிப்பிட்டு எழுதிவிட்டு பிற மொழிகளில் வசூலான தொகை என்ன என்பதை இதுவரை குறிப்பிடவில்லை.
என்ன காரணம் தென் மாநிலங்களில் 2.0 படத்தின் வசூல் மந்தம் என்பதுடன் யார் கொடுக்கும் வசூலையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. முதல் நாள் தமிழகத்தில் 13 கோடி மொத்த வசூல் என்கிற போது, நான்கு நாட்களில் ஐம்பது கோடி' வசூலை கடக்க முடியாது என்பது சினிமா வியாபாரம், வசூலை பற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.
சினிமா படங்களின் வசூல் தகவல்களை வெளிப்படை தன்மையுடன் கூறுவதில் இங்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் தயக்கமும் பயமும் தொடர் கதையாகி வருகிறது.
அதனை சினிமா தயாரிப்பில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், நடிகர்களும் தங்களுக்கு சாதகமாக கடந்த பத்தாண்டுகளாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
2.0 படத்தின் தமிழக வசூல் நேற்றுடன் முடிவடைந்த முதல் வார கணக்குப்படி சுமார் ஐம்பது கோடி ரூபாய் என்கிறது தியேட்டர் வட்டாரம். இதில் வரி, தியேட்டர் பங்குத் தொகை கழித்து தயாரிப்பாளருக்கு கிடைக்க கூடியது 27 கோடி ரூபாய் மட்டுமே..
ஆனால் இங்கு மொத்த வசூல் மட்டுமே சாதனையாக கருதப்பட்டு அறிவிக்கப்படும் சூழல் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு ஆரோக்கியமில்லை என்கின்றனர் சிறு பட தயாரிப்பாளர்கள். ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது இது போன்ற மிகைப்படுத்தபட்ட வசூல் கணக்குகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
கபாலி படம் வெளியானபோது அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு 500 கோடி வசூல் வரலாற்று சாதனை என மிகைப்படுத்தினார். ஏன் என்றால் ரஜினியிடம் அடுத்த கால்ஷீட் பெறுவதற்கான முயற்சியில் அவர் இருந்தார்.
அது இல்லை என்று ஆனபின்பு கபாலி சாதனை வசூல் இல்லை என்பதுடன் தமிழகத்தில் அப்படத்தின் ஏரியா உரிமை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு குறைந்த பட்ச தொகையை திருப்பி தந்தார்.
2.0 படம் இதில் இருந்து வேறுபட்டது. தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் லைகா படத்தை நேரடியாக வெளியிட்டிருக்கிறது. ஆந்திரா, கேரளாவில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டபடி விநியோகஸ்தர்கள் பணம் தரவில்லை.
இந்த சூழ்நிலையில் படத்தின் வசூலை லைகா நிறுவனம் மிகைப்படுத்தி கூறும் போது அதற்கு எதிராக விபரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் விநியோகஸ்தர்களுக்கு இல்லை என்பதால் லைகா நிறுவனம் வசூல் விபரங்களில் தப்பாட்டம் ஆடி வருகிறது என்கின்றனர் 2.0 படங்களின் விநியோகஸ்தர்கள். அதற்கு என்ன காரணமாக இருக்க கூடும் என்கிற போது படத்தயாரிப்பில் முதலீடு செய்வது மட்டும் லைகாவின் நோக்கம் இல்லை. இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதற்கு அரசியல் ரீதியாக செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள, தனது நிறுவனத்தை பொது வெளியில் பிரபலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் எளிதில் கொண்டுசெல்லும் சக்தி சினிமாவுக்கு உள்ளது. அதனை இந்நிறுவனம் தயாரித்த முதல் படமான கத்தி மூலம்தொடங்கி 2 .0 மூலம் சாதித்து உள்ளது லைகா நிறுவனம்.
கத்தி படம் தயாரித்த போது எனது இரண்டு நாள் செலவு தான் படத்தின் பட்ஜெட் என்றார் லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன். அப்படியென்றால் 2.0 படத்தின் பட்ஜெட் இந் நிறுவனத்தின் புரமோஷனுக்காக செய்யப்பட்டதா?வசூல் ரீதியாக ரஜினியை உலகளவில் லைகா உயர்த்திப் பிடிக்க வேண்டிய காரணம் என்ன? எல்லாம் அரசியல் என்கிறது விபரமறிந்த வட்டாரம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.