பதவி விலகிறாரா சப்ராஸ் அஹமட்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பை இராஜினாமா செய்ய தோன்றுவதாக சப்ராஸ் அஹமட், கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததன் பின்னணியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இதுபோல தோல்விகளை அடையும்போது அணித்தலைவர் பதவியிலிருந்து விலகத் தோன்றும். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். தென்னாபிரிக்கத் தொடர் மிகவும் கடினமானது. பதவி விலகல் குறித்து முன்பே யோசித்தால் அதனால் யாருக்கும் பயனில்லை.

நான் தவறு செய்தாலோ என்னால் அணி தோற்றுப்போனாலோ பதவியிலிருந்து விலகுவது குறித்து நிச்சயம் யோசிப்பேன். என்னை விடவும் ஒருவர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியை வகிக்கமுடியும் என்றால் அந்த வாய்ப்பு அவருக்கு நிச்சயம் வழங்கப்படவேண்டும்” என கூறினார்.

பாகிஸ்தானுக்குரிய சொந்த மண்ணான ஐக்கிய அமீரகத்தில் விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளில் நான்கில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது. இதில் கடந்த மூன்று தொடர்களில் 2 தொடர்கள் தோல்வி.

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆறு டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாளில் தோல்வியைச் சந்தித்துள்ளது பாகிஸ்தான்.

நியூஸிலாந்துக்கு வெளியே 49 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது நியூஸிலாந்து அணி.
இதையடுத்து சர்ஃப்ராஸ் அஹமட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.