புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை நூலிழையில் வீழ்த்தியது குஜராத்!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி, 29-27 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.


2018ம் ஆண்டிற்கான புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. முதல் சுற்றுக்களில் சென்னை, புனே உள்ளிட்ட நகரங்களில் போட்டி நடைபெற்ற நிலையில், அடுத்த சுற்று போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றன. தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் குஜராத் மோதியது. தொடர் வெற்றிகளைப் பெற்று சிறப்பான பார்மில் இருக்கும் குஜராத் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற போராடிவரும் டைட்டன்ஸுடன் மோதியதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
டைட்டன்ஸ் அணியின் ராகுல் சவுத்ரி சிறப்பாக விளையாடி 8 புள்ளிகளை எடுத்தார். ஆனால், குஜராத்தை வீழ்த்த இது போதவில்லை. சிறப்பாக விளையாடிய அந்த அணியின் பிரபஞ்சன் 10 புள்ளிகளும், சச்சின் 9 புள்ளிகளும் எடுத்தனர். கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் குஜராத் அணி 29-27 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியுடன் புனேரி பல்தான் மோதியது. இந்தப் போட்டியில் பாட்னா 53-36 என்ற புள்ளிகள் கணக்கில் புனே அணியை துவம்சம் செய்து அபார வெற்றி பெற்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.