சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தல்- யேர்மனி தமிழ் இளையோர்கள்

யேர்மனியில் நடைபெற்ற "70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்"
மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்து.

மனிதவுரிமை சாசனம் தொடர்பான பொது அறிவிப்பு 10.12.1948 ஆண்டு முன்வைக்கப்பட்டது. மனிதவுரிமை சாசனம் இனம் மொழி நிறம் பால் அனைத்தையும் கடந்து உலகில் வாழும் அனைத்து மக்களும்    அடிப்படை உரிமைகளோடு மரியாதையுடனும்  , சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கு உறுதியளிக்கின்றது.

இருப்பினும் மனிதவுரிமைகளை பற்றி பறைசாற்றும் பல நாடுகள் அதே மனிதஉரிமைகளை மீறுகின்றது.உலகளாவிய ரீதியில் மக்கள் மீதான அடக்குமுறை வன்முறை தொடர்கின்றது.

இக் காரணத்தின் பின்னணியில் நேற்றைய தினம் யேர்மனியின் தலைநகர் பேர்லின் மாநகரத்தில் பசுமை கட்சியின் ஏற்பாட்டில்" "மதித்தல்.பாதுகாத்தல்.ஊக்குவித்தல்."70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்." எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , மனிதவுரிமை ஆர்வலர்கள் , மனிதவுரிமை சட்டத்தரணிகள் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்படும் மக்களின் குறிப்பாக பெண்களின் சிறுவர்களின் மனிதவுரிமைகளை நிலை நாட்ட எவ்வாறு நாம் செயற்பட வேண்டும் எனவும் கலந்துரையாடினர். உலகளாவிய ரீதியில் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களை செய்தவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்பாக கொண்டுசெல்லப்பட்டாலும்   அநீதிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இது தொடர்பாகவும் இம் மாநாட்டில் நடைபெற்ற பல அமர்வுகளில் ஆராயப்பட்டது .

இம் மாநாட்டில் கலந்துகொண்ட பேர்லின் தமிழ் உயர்கல்வி மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பாகவும் தமது கேள்விகளை முன்வைத்தனர். 10 ஆண்டுகள் கடந்தும் சிறிலங்காவில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எவ்விதமான பன்னாட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் சிறிலங்காவை இப் பாரிய குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.