ஆளுநர் சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்!

எழுவர் விடுதலை குறித்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் பேசிய கி.வீரமணி, “ஆளுநர் சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்காத ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைக் கண்டித்து, இன்று (டிசம்பர் 3) மதிமுக மற்றும் திக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக சின்னமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் ராஜ்பவனை விட்டும், தமிழகத்தை விட்டும் வெளியேற வேண்டும் என்று வைகோ தலைமையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ஆளுநர் அவர்களே... நீங்கள் சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவீர்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய கட்டம்தான் இது. எழுவரும் நம்முடைய ரத்தங்கள், அவர்கள் தேவையில்லாமல் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். ஆனால் பற்றி எரியும் நேரத்தில், ஆளுநர் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார். எரிமலையின் குமுறல் இங்கு இருக்கிறது, மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். இதற்கு என்ன விலை கொடுக்கவும் அனைவரும் தயாராக இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் ஏழு பேரும் விடுதலை செய்யப்படாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை நடத்துவோம்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், டி.கே.எஸ்.இளங்கோவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும், அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழக அரசின் பரிந்துரை உள் துறை அமைச்சகத்துக்கு சென்றது என்றால், அதனை அனுப்பியது யார்? ஆளுநர் அனுப்பினார் என்றால் அது சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு விரோதம். மத்திய அரசின் எடுபிடியாக ஆளுநர் தமிழகத்தில் போட்டி அரசாங்கம் நடத்திவருகிறார். அவர் உள் துறைக்கு பரிந்துரை செய்திருந்தால், தலைமை நீதிபதியின் தீர்ப்பை அவமதித்த குற்றத்துக்கு ஆளாவார். ஆகவே நீதிமன்ற அவமதிப்பில் ஆளுநரை கூண்டில் நிறுத்தலாம். ஒருவேளை அவர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, தமிழக அரசு உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தால், அது ஈழத் தமிழர்களுக்கு செய்த பச்சை துரோகம் ஆகும். மேலும் பதவியில் நீடிக்க முதல்வர் எடப்பாடிக்கும் அமைச்சர்களுக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது” என்று தெரிவித்தார்.
மேலும், “பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர். அவர் சட்டத்தை அவமதிக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்திவிட்டார். அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்” என்று வலியுறுத்திய வைகோ, மத்திய அரசு அவரை வெளியேற்றாது. ஆனால், மத்திய அரசை மக்கள் வெளியேற்றிவிடுவார்கள். அதன்பிறகு வரும் புதிய அரசு, இவரை மாற்றம் செய்யும் என்றும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கிண்டி எம்.ஆர்.சி மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு மைக் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் வைகோ உரையாற்றினார். மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, இனி ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம், நிவாரண நிதி குறைவாக அளித்த பிரதமர் தமிழகம் வரும்போதும் கருப்புக்கொடி காட்டப்படும் என்று அறிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.