ராகுல்- மோடி மோதல்!

இந்துயிசம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பேச்சுகளில் மோதல் உருவாகியிருக்கிறது.


கடந்த வாரம் ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் செய்து வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புகழ்பெற்ற புஷ்கர் கோயிலுக்கு வழிபடச் சென்றார். அங்கே கோயில் அர்ச்சகரிடம் தனது கோத்ரம் தத்தாத்ரேய கோத்ரம் என்று ராகுல் சொன்னதாக வீடியோ பதிவுகள் பரவின. அப்படி ஒரு பெயரில் கோத்திரமே இல்லை என்றும் ராகுல் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். மேலும் ராகுலுக்கு இந்துமதம் பற்றி எதுவும் தெரியாது என்றும் பாஜக வட்டாரத்தில் இருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி ராஜஸ்தானில் பிரசாரக் கூட்டங்களில் பேசிய ராகுல் காந்தி,

“இந்துயிசத்தின் சாராசம் என்ன? பகவத் கீதை என்ன சொல்கிறது? ஞானம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. உன்னைச் சுற்றி ஞானம் இருக்கிறது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஞானம் இருக்கிறது என்று சொல்கிறது இந்துயிசம்.

நமது பிரதமர் தான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் இந்துயிசத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்ளாதவராக இருக்கிறார். அவர் என்ன வகை இந்து என்பதே தெரியவில்லை” என்று கிண்டல் செய்தார்.

மேலும் ராஜஸ்தான் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், “கடவுள், நம்பிக்கை மதம் என்பது இரு கூறுகளைக் கொண்டது. நமது மனதுக்குள் இருக்கும் தனிப்பட்ட நம்பிக்கை. அடுத்தவரது நம்பிக்கை. ஆனால் பாஜக மதம் என்பதை தனது அரசியல் செயல்திட்டமாக வைத்திருக்கிறது. இந்து மதத்தைப் பற்றி யாருக்கெல்லாம் புரிகிறதோ அவர்கள் எல்லாம் பாஜகவுக்கு எதிராக இருப்பார்கள். அதனால் யாரும் இந்துயிசத்தைப் புரிந்துகொள்கிறார்களை அவர்களை பாஜக வெறுக்கிறது. மக்கள் எல்லாரும் இந்துயிசத்தைப் புரிந்துகொண்டுவிட்டால் பாஜக அதை வைத்து அரசியல் செய்யமுடியாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று டிசம்பர் 3 ஆம் தேதி ராஜஸ்தானில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ராகுலுக்கு பதில் கொடுத்துள்ளார்.

“காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ராமர் என்பது புராணக் கற்பனைப் பாத்திரம் என்று சொன்னது. எனக்கு இந்துத்துவம் பற்றிய போதிய புரிதல் இல்லை என்று சிலர் சொல்லி வருகிறார்கள். ராஜஸ்தான் மக்கள் எனக்கு எதற்காக ஓட்டளிக்கப் போகிறார்கள்? எனக்கு இந்துயிசம் புரிகிறது என்பதற்காகவா? அல்லது ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக அரசு செய்த குடிநீர், மின்சாரம், சாலை போன்ற வளர்ச்சிப் பணிகளுக்காகவா?” என்று கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.