பாரிஸில் மக்ரோனுக்கு எதிரான புதிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்!

மஞ்சள் சட்டை போராட்டக்காரர்களின் நான்காவது சுற்று ஆர்ப்பாட்டங்கள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆரம்பமாகியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாடுகளால் பாரிஸ் நகரம் இன்று (சனிக்கிழமை) காலை தொடக்கம் மீண்டும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

எரிபொருள் வரியதிகரிப்பு மற்றும் வாழ்வாதார செலவு அதிகரிப்பை கண்டித்து போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பாரிஸ் நகரம் முழுவரும் 89000 பொலிஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரிஸ் நகரில் மாத்திரம் சுமார் எண்ணாயிரம் பொலிஸார் பணியில் உள்ளனர்.

இந்தநிலையில், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்களையும், நீர்த்தாரை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இதுதவிர, 12 பெரும் கவச வாகனங்களும் நகரில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 177 பேர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், 32 பேர் வரை கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.