பிள்ளையானுடன் இணைந்தே பரராஜசிங்கத்தை கொன்றோம் ! எதிரிகளின் வாக்குமூலத்தை ஏற்றது மன்று.
என முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது.
வழக்கின் எதிரிகளில் ஒருவரான பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) ஜோசெப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடையவர் என்று எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், பிள்ளையான் உள்ளிட்ட 6 எதிரிகளுக்கும் எதிரான வழக்கை மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுமதியளித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸர்தீன், வழக்கை பெப்ரவரி 21, 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் ரெங்கசாமி கனகநாயகம், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இராணுவ புலனாய்வில் பணியாற்றிய மீராலெப்பை கலீல் உள்ளிட்ட ஆறு பேர் மீது 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு முன்னெடுக்கப்படுகிறது. இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸர்தீன் முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
எதிரிகள் ஆறு பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகளால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய நால்வருடன் இணைந்தே நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கத்தை கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர். அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதிரிகளால் சுயமாக வழங்கப்பட்டது என ஏற்றுக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், 6 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலதிக விளக்கத்தை முன்னெடுக்குமாறு வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பணித்தது.
வழக்குத் தொடுனர் சார்பில், மூத்த அரச தரப்பு சட்டத்தரணி மாதவ தென்னக்கோன், அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த் ஆகியோர் முன்னிலையாகினர். எதிரிகள் 6 பேர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா முன்னிலையானார்.
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005ஆம் ஆண்டு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
கருத்துகள் இல்லை