வட்டு.பிளவத்தை அமெரிக்கன் மிசன் பாடசாலைக்கு முன்பாக போராட்டம்

வட்டு.பிளவத்தை அமெரிக்கன் மிசன்
பாடசாலைக்கு முன்பாக போராட்டம்
-இரு ஆசிரியைகளை இடமாற்றக் கோரிக்கை-


வட்டு. பிளவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்பிக்கும் இரு ஆசிரியைகளை இடமாற்றம் செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுத்து பாடசாலைச் சமூகம் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை 7.00 மணிமுதல் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள இப்பாடசாலையில் மாணவர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் கல்வி அதிகாரிகள் வருகைதந்து உறுதிமொழி வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர்கள் கூறினர்.

சகோதரிகளான மேற்படி ஆசிரியைகள் இருவரும் பல வருடங்களாக இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றனர் எனவும் அவர்களின் கற்பித்தலில் தமக்கு திருப்தி இல்லை எனவும் தெரிவித்த பெற்றோர்களும் பழைய மாணவர்களும் குறித்த ஆசிரியைகளை இடமாற்றம் செய்யக் கோரி சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

இதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என பெற்றோர்களும் பழைய மாணவர்களும் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியைகளில் ஒருவருக்கு இடமாற்றம் வந்திருந்த போதிலும் கல்வி அதிகாரிகள் அவரை மீண்டும் அப்பாடசாலையில் கடமையாற்ற அனுமதி வழங்கியிருக்கின்றனர் எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைப் பங்கீடு செய்வதில் கல்வி அதிகாரிகள் கடைப்பிடிக்கும் முறையற்ற நடைமுறைகளால் சிறிய பாடசாலைகளும் கிராமப்புற மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-பி.பொன்ராசா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.