விஸ்வாசம்: கோவை ரிலீஸில் சிக்கல்!

அஜித் நடிப்பில் நாளை (ஜனவரி 10) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது விஸ்வாசம் திரைப்படம். ஆனால் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
விஸ்வாசம் படத்தின் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோக உரிமையை விநியோகஸ்தர் சாய்பாபா பெற்றிருந்தார். இவர் சினிமா பைனான்சியர் உமாபதியிடம் வாங்கியிருந்த கடனில் 78 லட்சம் ரூபாயை திருப்பித் தராததால் உமாபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். எனவே அப்பகுதிகளில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. பாக்கித் தொகையில் 35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதமுள்ள தொகையை 4 வாரத்திற்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை இன்று (ஜனவரி 9) விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர், “படத் தயாரிப்பு நிறுவனம் மனுவாகத் தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.