கடற்படைத்தளம் அமைக்க திருகோணமலை மீது கண்வைக்கிறது பிரிட்டன் ?


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியபிறகு ( பிரெக்சிட் )தெற்காசியாவில் இராணுவத் தளங்களை அமைப்பதற்கான பேரார்வமிக்க திட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன் திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை நிறுவ உத்தேசிப்பதாகத் தெரியவருகிறது.


 உலகளாவிய விவகாரங்களில் வல்லாதிக்க அந்தஸ்தை மீளப்பெறும் முகமாக தெற்காசியாவிலும் கரிபியன் பிராந்தியத்திலும் பிரிட்டன் இராணுவப் பிரசன்னத்தை அதிகரிக்க விரும்புகிறது. அதை நோக்கிய திட்டத்தில் இந்த பிராந்தியங்களின் நாடுகளில் இராணுவத்தளங்களை பிரிட்டன் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தெற்காசியாவில் இராணுவத்தளங்களைத் திறக்கும் திட்டம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹன்ற் சூசகமாகத் தெரிவித்திருப்பதாகவும் அதற்கான சாத்தியமான நாடுகளாக இலங்கை, மாலைதீவு அல்லது சிங்கப்பூர் அமையக்கூடும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியிருக்கின்றன. பிரெக்சிட்டுக்குப் பிறகு திருகோணமலையில் பிரிட்டன் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கக்கூடிய முயற்சிகளை பிராந்திய வல்லரசான இந்தியா வரவேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையைப் பொறுத்தவரை, திருகோணமலைத் துறைமுகத்திற்குள் பிரிட்டன் வருமாக இருந்தால் அது இலாபகரமான ஒரு திட்டமாக அமையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த துறைமுகத்தின் கேந்திரமுக்கியத்துவம் காரணமாக எழக்கூடிய அசௌகரியமான சூழ்நிலையையும் தவிர்க்க வாய்ப்பாக இருக்கும் என்பது அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது. இது தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் ரெலிகிராஃப் பத்திரிகையில் பாதுகாப்பு இணையமைச்சர் கவின் வில்லியம்சன் தெரிவித்த தகவலை வெளியுறவு அமைச்சர் ஹன்ரும் ஊர்ஜிதம் செய்தார். ” சர்வதேசரீதியில் பிரிட்டனின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடுவதை பிரிட்டிஷ் பிரஜைகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்திக் கேட்டிருக்கிறார். பிரெக்சிட்டுக்குப் பிறகு உலக அரங்கில் ஐக்கிய இராச்சியம் உயர்ந்துநிற்கும் என்பதை பிரஜைகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்” என்று ரெலிகிராஃப் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இராணுவத்தளமொன்றை அமைக்கும் சாத்தியம் குறித்து கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, பாதுகாப்புத்துறையில் பிரிட்டனுக்கு இருக்கக்கூடிய உலகளாவிய பாத்திரத்தை அவர் நிராகரிக்கவில்லை என்ற போதிலும் இலங்கையில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இப்போது பிரிட்டனுக்கு இல்லை என்று குறிப்பிட்டார். ” பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக்கொள்கை விவகாரங்களில் உலகளாவிய பங்கை பிரிட்டன் வகிக்கிறது.தொடர்ந்தும் வகிக்கும்.இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் ஏற்பாடுகள் தொடர்பில் எம்மிடம் தற்போது திட்டம் எதுவும் கிடையாது ” என்று அவர் கூறீனார். பிரெக்சிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. தனது பிரெக்சிட் திட்டத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதில் அவர் பெரும் போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது. திருகோணமலையில் இராணுவத் தளம் அமைப்பதற்கான திட்டம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெற்றிகரமாக வெளியேறிய பின்னர தோன்றக்கூடிய நிலைவரங்களின் பின்னணியிலேயே நோக்கப்படவேண்டியதாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.