புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் அழைப்பு

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் உன்னத தேசம் பற்றிய ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு ஈடேற அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.


• புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் அழைப்பு….

பொதுமக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் உன்னத தேசம் பற்றிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எதிர்பார்ப்பை ஈடேற செய்வதற்கு அனைத்து அரச ஊழியர்களும் புத்தாண்டில் தமக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்தார்.

பிறந்திருக்கும் புத்தாண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் வகையில் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்த  உதய ஆர்.செனவிரத்ன அவர்கள், கடந்த ஆண்டில் முகங்கொடுத்த சவால் நிறைந்த நிகழ்வுகளை நினைவிற்கொண்டு பிறந்திருக்கும் புத்தாண்டின் சவால்களை கூட்டாக வெற்றிகொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

மக்களின் மனக்குறைகளை கேட்டறிந்து அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சிறந்த சேவையின் மூலம் அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு ஒன்றிணையுமாறும் உதய ஆர்.செனவிரத்ன அவர்கள் அனைத்து அரச ஊழியர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

புத்தாண்டின் கடமைகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதியின் செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், அனைத்து பணிக்குழாமினரும் கூட்டாக அரச சேவை உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.