தாயின் சடலத்தை 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்!

இறுதிச்சடங்கிற்காக தாயின் சடலத்தை 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்!


ஒடிசாவில் தலைவிரித்தாடும் சாதிக்கொடுமையால், தாயின் சடலத்தை  ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் மகனே எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி சின்ஹானியா, தனது 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் உடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தண்ணீர் எடுக்கச் சென்ற ஜானகி சின்ஹானியா தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார். தாயின் மரணத்தால் நிலைகுலைந்து போன சரோஜ், அவருக்கு இறுதி சடங்கு செய்ய அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினார். ஆனால், அவர் பட்டியலினத்தவர் என்பதை காரணம் காட்டி அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

இதனால் மனமுடைந்து போன சரோஜ், தனி ஆளாக இறுதி சடங்கு செய்ய தீர்மானித்தார். தாயின் உடலை துணியால் மூடிய அவர், சைக்கிளின் பின்புறம் வைத்து, தாயின் உடலை தனி ஆளாக ஐந்து கிலோ மீட்டர் தொலைவுள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டுசென்று இறுதிசடங்கு செய்தார்.

செல்லும் வழியில் சைக்கிளில் இருப்பது என்ன என்று கேட்டவர்களுக்கு தனது தாய் மரணமடைந்ததை பரிதாபமாக கூறிய போதும், அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. தலைவிரித்தாடும் சாதிக் கொடுமையால், தாயை இழந்த சிறுவனுக்கு ஒருவரும் உதவ முன்வராதது பெரும் சோகத்தை விதைத்துள்ளது.
-ஆனந்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.