பிரதமர் ரணில் தமிழ் மக்களுக்கான சொத்து -ஞா.சிறிநேசன்


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுத்தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திசவீரசிங்கம் நான்காம் குறுக்கு வீதியை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆண்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு ஜனநாயக அரசியலுக்கு அப்பால் கேலிக்கூத்தான விடயங்கள் நடந்தேறியது.


 சட்ட ஆட்சியை பாதுகாக்கவேண்டும், அரசியல் யாப்பினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நியாயமாக, நீதியாக சிந்தித்ததன் அடிப்படையில் சட்ட விரோதமான, அடாவடித்தனமான சூழ்நிலையினை தவிர்த்திருந்தோம்.


 தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த இடத்திலும் பணத்திற்கோ, பதவிக்கோ பலியாகாத கட்சி என்ற உண்மையினையும் நாங்கள் நிலைநாட்டியுள்ளோம். ஒருவர் விதிவிலக்காக சென்றாலும் ஏனைய அனைவரும் பொதுவிதியாக ஒரு கொள்கையின் கீழ் இருந்துள்ளோம். தற்போது ஆட்சியமைத்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினையும், பொருளாதார ரீதியான அபிவிருத்தி திட்டங்களையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.