தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றம்!!

கூட்டு ஒப்பந்தம் மீண்டும் தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டது.
பல போராட்டங்களின் பின்பு வெறும் குறைந்த தொகையே சம்பள அதிகரிப்பாக கிடைத்துள்ளது. இந்த கூட்டு ஒப்பந்தத்தை மலையக மக்கள் முன்னணி ஏற்றுக் கொள்ளவில்லை என்று சிறப்புப் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர்வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
புதிதாக கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக ஆராய்வதற்கான மலையக மக்கள் முன்னணியின் கூட்டம் நுவரெலியாவில் நேற்று நடைபெற்றது.

அதில் அவர் தெரிவித்ததாவது,

கூட்டு ஒப்பந்தம் மூலமாக தொழிலாளர்களுக்கு எந்த விதமான நன்மையும் கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. ஏற்கனவே இந்த கூட்ட ஒப்பந்தத்தில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி திறன்படி கொடுப்பனவு 140.00 ரூபாவும், வரவுக்கான கொடுப்பனவு 60.00 ரூபாவும் இல்லாது செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த வகையில் மிக குறைந்த ஒரு தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தளவு குறைந்த தொகையை அதிகரிப்பாக பெற்றுக் கொள்வதற்கு எத்தனை போராட்டம், எத்தனை வேலை நிறுத்தம். இவை ஒன்றுமே இல்லாமல் இந்த அதிகரிப்பை பெற்றிருந்தால் கூட மனதளவில் திருப்தி அடைய முடியும். அது மட்டுமல்லாமல் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் வெறுமனே சம்பள உயர்வு மாத்திரமே பேசப்பட்டுள்ளது.

ஒரு தோட்ட தொழிலாளி இறந்தால் அதற்கான கொடுப்பனவாக இன்னும் 2000.00 ரூபா மட்டுமே வழங்கப்படுகின்றது. வருடத்திற்கான ஊக்குவிப்பு தொகை 750.00 ரூபாவழங்கப்படுகின்றது. இவை போதுமானதாக இல்லை. இந்த கொடுப்பனவுகள் எல்லாம் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்டவை.

இவை இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல மாற்றி அமைக்கப்பட வேண்டும்.அதனை கட்டாயமாக இந்த கூட்டு ஒப்பந்தத்தில் பேசப்பட்டு அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதனை செய்வதற்கு கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் மறந்து விட்டன.

தொழிலாளர்களின் சுகாதார வசதிகள் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் பேசப்பட வேண்டும்.இன்றைய நிலையில் தொழிலாளர்களுக்கான சுகாதார வசதி, பாதை வசதி , தண்ணீர் வசதி, வீட்டு வசதி என அனைத்தையுமே அரசு செய்து வருகின்றது.

இதில் எதிலுமே பெருந்தோட்ட கம்பனிகளுக்கு பங்கும் இல்லை. அவர்கள் இதனை கண்டு கொள்வதும் இல்லை. அது மாத்திரமன்றி தொழிலாளர்கள் தொழில் செய்கின்ற பொழுது குளவி கொட்டுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான வாகன வசதிகளை கூட ஒரு சில பெருந்தோட்ட கம்பனிகள் செய்து கொடுப்பதில்லை.

எனவே இப்படி பல்வேறு குறைபாடுகளுடன் இந்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டு ஒப்பந்தத்தை எந்த காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. இதனை மலையக மக்கள் முன்னணி ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.