மத்திய கிழக்கில் அமைதி அவசியம் – பாப்பரசர் பிரான்சிஸ்!!

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், யேமன், சிரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் அமைதி நிலவவேண்டும் எனத் தெரிவித்தார்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டானது சகிப்புத் தன்மைக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாப்பரசர் பிரான்சிசுக்கு அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பொப்பரசர், அங்கு நேற்று முன்தினம் வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்டார்.

வத்திக்கானிலிருந்து விமானத்தில் வருகைத் தந்த அவருக்கு, டுபாய் விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் இவரை நேரில் சென்று வரவேற்றார்.

இதனையடுத்து, அபுதாபி அரண்மனைக்கு சென்று முஸ்லிம் மதத் தலைவர்கள், அரச பிரதானிகள் என பலரையும் பாப்பரசர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, அவருக்கு அரண்மனை வாயிலில் இராணுவ மரியாதையுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பொது மக்கள் மற்றும் அரச தலைவர்கள் மத்தியின் உரையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ், யேமன், சிரியா, ஈராக் மற்றும் லிபியாவின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கவலை வெளியிட்டார்.

மேலும், அந்நாடுகளின் நிலைமை மாற்றமடைந்து, அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறும் மத நல்லிணக்கச் செயற்பாடுகள், மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் பாப்பரசர், குறிப்பிட்டார்.

அனைத்து இன மக்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மத நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அவர் இதன்போது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதனையடுத்து, அவர் அங்குள்ள நினைவு பலகையில் கையொப்பமிட்டு, அந்நாட்டின் பிரதானிகளுடனான விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

பாப்பரசர் பிரான்ஸில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான தனது பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே யேமன் நாட்டில் இடம்பெறும் உள்நாட்டுப் போர் தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

யேமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், அந்த நாட்டு அரசுக்கு ஆதரவாக, கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையில், ஐக்கிய அரபு அமீரகமும் அங்கம் வகிக்கின்றது.

இந்தநிலையில், இந்த பயணத்தின் போது பாப்பரசர் பிரான்சிஸ், யேமன் உள்நாட்டு போர் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.