யாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்!


யாழ்ப்பாணம், நாகவிகாரை விடுதியின் மலக்கழிவுகள் முழுமையாக அருகில் உள்ள வடிகாலுக்குள் விடப்படுவதால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கோடு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வ.பார்த்திபன், எஸ்.தனுஜன் ஆகியோரினாலேயே மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பலதடவை வலியுறுத்தியுள்ள போதும் உடன் நடவடிக்கை எடுக்க யாழ்.மாநகர சபை நிர்வாகத்தினர் மறுத்து வருவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பணிப்புரை விடுத்துள்ள நிலையில், மாநகர சபை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். யாழ்.நகரப் பகுதியில் தொடர்ந்தும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தக் கூடியவகையில் வெளிப்படையாக மலக்கழிவுகள் இவ்வாறு திறந்துவிடப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு மாநகர சபையினர் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடில் குறித்த வடிகாலுக்குள் மலக்கழிவு வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய் நிரந்தரமாக அடைக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.