கள்ளிக்குளம் பகுதியில் வீட்டுத்திட்டம் மற்றும் காணி ஆவணங்கள் வழங்கப்படவில்லை!

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் வீட்டுத்திட்டம் மற்றும் காணி ஆவணங்கள் வழங்கப்படவில்லையென தெரிவித்து மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள், அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.


வவுனியா கள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

அதன்பின்னர் அரசாங்க அதிபரின் வாக்குறுதிக்கு அமைய குறித்த மக்கள் அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர்.

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் நீண்டகாலமாக குடியேறியுள்ள மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் கடந்த 2011ஆம் ஆண்டு அங்கு குடியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான வீட்டுத்திட்டம், காணி ஆவணங்கள் என்பன இதுவரையில் வழங்கப்படவில்லை.

அண்மையில் அரசாங்க அதிபருக்கு தனிநபர் ஒருவர் அப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதனை மீள்பரிசீலனை செய்யுமாறும் மேலும் அங்குள்ள மக்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பிரயோகித்து அரச அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அக்கடிதம் பிரதேச செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரினால் பணிக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் கிராம அலுவலகரினூடாக கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயத்தில் அரசாங்க அதிபர் நேரடியாக தமது பகுதிக்கு வருகைத்தந்து நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகயை மேற்கொள்ளுமாறு கோரி மகஜரை வழங்கியுள்ளனர்.

குறித்த மகஜரைப் பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர், தற்போது வழங்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டம் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் மாவட்ட மட்டத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வீட்டுத்திட்டங்களை வழங்க பணிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் பிரதேச செயலாளருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.