“ஓரே தேசம். நாம் அனைவரும் இலங்கையர்” என ஜெனிவாவில் கூலிக்கு மாரடித்தவர்களுக்கு!

இலங்கை அரசினால் கூலிக்கு அனுப்பப்பட்ட சிலர் ஜெனிவாவில் ஜ.நா முன்றலில் “புலி வேண்டாம். நாம் அனைவரும் இலங்கையர்” என்று மாரடித்தார்கள்.

இதில் ஒருபெண்மனி தான் தமிழர் என்று காட்டிக்கொண்டு கொச்சை தமிழில் பேசினார்.  இதில் ஆச்சரியப்பட ஒன்று மில்லை.

ஏனெனில் சுமந்திரனையே விலைக்கு வாங்கி அனுப்பிய இலங்கை அரசால் இவ்வாறான சாதாரண பெண்மனிகளை வாங்கி அனுப்ப முடியாதா என்ன?

சரி. பரவாயில்லை. யாரை வேண்டுமானாலும் அவர்கள் விலைக்கு வாங்கி கூலிக்கு மாரடிக்க வைக்கட்டும். ஆனால் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டியது நமது கடமை.

இலங்கை ஒரே தேசம் என்பது ஆங்கிலேயர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் தமிழர் தேசம் தமிழரால்தான் ஆளப்பட்டு வந்தது.

1948ல் சுதந்திரம் பெறும்போது தமிழர் தேசம் தமிழர் கையில் வழங்கப்பட வேண்டும் என தமிழர் வலியுறுத்தியிருந்தால் நிச்சயம் பெற்றிருக்க முடியும்.

ஆனால் 1948க்கு பின்னர் வந்த இலங்கை அரசுகள் தமிழர்களையும் இலங்கையராக கருதவில்லை. மாறாக இன ஒடுக்குமுறையைத்தானே செய்து வந்தன.

இறுதியாக வேவழியின்றி 1976ல்தானே தமிழீழம் என்னும் தனிநாட்டு கோரிக்கையை தமிழ் மக்கள் முன்வைத்தார்கள்.

1983ல் 36 இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தன. அதில் ஒன்றுகூட அருகில் இருக்கும் தமிழ்நாட்டுடன் இணைந்து “அகண்ட தமிழ்நாடு” கேட்கவில்லை.

இன்றும்கூட இத்தனை அழிவிற்கும் பின்னரும்கூட ஒரு தமிழ் அமைப்புகூட அகண்ட தமிழ்நாடு கோரிக்கையை இதுவரை வைக்கவில்லை.

இந்திய உளவுப்படையால் அனுப்பப்பட்ட ஈழத்து சிவசேனைகூட இந்துத் தமிழீழத்தைதான் முன்வைக்கிறதேயொழிய  இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரவில்லை.

புலிகளின் ஆட்சி காலத்தில்கூட எந்தவொரு வெளிநாட்டு கம்பனிகளையும் உள் நுழைய அனுமதிக்கவில்லை.

ஆனால் தேசப்பற்று பேசும் நீங்கள்தான் வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழு நாட்டையும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்று வருகிறீர்கள்.

எனவே தேசப்பற்று பற்றி தமிழ் மக்களுக்கு நீங்கள் போதிக்க வேண்டாம். உங்களைவிட அதிக தேசப்பற்று தமிழ் மக்களுக்கு உள்ளது.

அடுத்து புலிகள் வேண்டாம் என்கிறீர்கள். சரி. கடந்த 10 வருடமாக புலிகள் இல்லைதானே? ஏன் உங்களால் தமிழர் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை?

அண்மையில்தான் 71வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடினீர்கள். ஆனால் அதேவேளையில் கேப்பாப்புலவில் ஒரு குழந்தை வீதியில் உறங்கிறது.

அந்த குழந்தைக்கு அதன் சொந்த நிலத்தை பத்து வருடமாக ஏன் உங்களால் வழங்க முடியவில்லை? அது ஒரு தமிழ்க் குழந்தை என்பதால்தானே அதன் நிலத்தை நீங்கள் மறுக்கிறீர்கள்?

“இலங்கை ஒரே தேசம். நாம் அனைவரும் இலங்கையர்” என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால் அந்த குழந்தையும் இலங்கையர் என்று அதன் நிலத்தை வழங்கியிருக்கலாமே?

இது ஒரு சின்ன உதாரணமே. சொல்வதானால் பக்கம் பக்கமாக இன்னும் எழுதலாம்.

இறுதியாகவும் உறுதியாகவும் உங்களுக்கு ஒன்று கூறவிரும்புகிறோம் “ இன்னொரு இனத்தின் சுதந்திரத்தை மறுக்கும் எந்த இனமும் தான் சுதந்திரத்தை ஒருபோதும் அனுபவிக்க முடியாது”.

எனவே இலங்கையில் சிங்கள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமெனில் அவர்கள் தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தையும் அமைதியையும் வழங்க வேண்டும்.

மாறாக, தமிழ் மக்களை அழிக்க முற்பட்டால் அழியப்போவது தமிழ் இனம் அல்ல சிங்கள இனம்தான் என்பதை விரைவில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

-பாலா-
24.03.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.