சர்ச்சைக்குரிய விக்கெட்: அஸ்வின் மீது விமர்சனம்!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லரை பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் ஆக்கிய விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. இலக்கைத் துரத்தி ஆடிவந்த ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெற்றி வாய்ப்பு ராஜஸ்தான் அணிக்கு பிரகாசமாக இருந்த நேரத்தில் 13ஆவது ஓவரை வீசிய அஸ்வின் பட்லரைச் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் செய்தார். ’மன்கடிங்’ என்று கூறப்படும் இந்த ரன் அவுட்டின்படி பந்து வீச்சாளர் பேட்ஸ்மேனுக்குப் பந்து வீசும்போது, எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் ரன் எடுக்க வசதியாகச் சில அடிகள் எடுத்துவைக்கும் போது, பந்துவீச்சாளர் கிரீஸ் அருகில் வந்து நடுவருக்கு அருகில் உள்ள ஸ்டம்பைத் தட்டி ரன் அவுட் செய்வார். சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் படி இந்த முறையில் விக்கெட் எடுக்கலாம். நேற்றைய போட்டியின்போது அஸ்வின் பட்லரை இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்ததும் தீர்ப்பு மூன்றாவது நடுவரிடம் சென்று, அவுட் கொடுக்கப்பட்டது.

இருந்தபோதும் வார்னிங் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், பந்து வீச்சாளர் பந்துவீசுவதற்கான ஆக்‌ஷன் முழுமையாக நிறைவுசெய்யப்படவில்லை என்றும் தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்ன், “கேப்டனாகவும், ஒரு மனிதராகவும் அஸ்வினின் இந்தச் செயல் அதிருப்தி அளிக்கிறது.

ஐபிஎல் கேப்டன்கள் அனைவரும் ஆட்டத்துக்கான உணர்வுடன் ஆட உறுதிபூண்டுள்ளனர். பந்து வீச வேண்டும் என்ற நோக்கம் அஸ்வினின் செயலில் தெரியவில்லை. எனவே அந்தப் பந்தை டெட் பாலாக அம்பயர் அறிவித்திருக்க வேண்டும். ஐபிஎல் தொடருக்கு இது நல்லதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.