வெள்ளைக்கொடிச் சம்பவம் போர்க்குற்றமாகும் ஆதாரங்கள் என்னிடம் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தகவல்!!

இராணுவத்தினர் சிலர் போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், அது குறித்த இதற்கான சாட்சியங்கள் என்னிடம் இருக்கின்றது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் வரவர மோசமாகவுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில் அரசு அடைக்கவேண்டும் .

அப்போது தான் ஐ.நாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ளலாம்.

போரின் இறுதியின் போதும் அதன் பின்னரும் சில இராணுவ அதிகாரிகள் தமிழ் மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகள் மீதும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர்.

இதற்கான சாட்சியங்கள் என்னிடம் இருக்கின்றன. அதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழர்களும் சாட்சிகளாக உள்ளனர். வெள்ளைக்கொடிச் சம்பவம் மிகப் பெரிய போர்க்குற்றமாகும்.

இதனுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மற்றும் அப்போதைய ஆட்சியில் இருந்த முக்கியமானவர்களின் குரல் பதிவுகளும், குற்றம் இழைக்கப்பட்ட காணொலிகளும் என்னிடம் இருக்கின்றன.

சாட்சியங்களை விசாரித்து இராணுவ அதிகாரிகளையும், அப்போதைய ஆட்சியில் இருந்து போர்க்குற்றங்களுக்குத் துணைபோன முக்கியமானவர்களையும் உடன் சிறைக்குள் தள்ளவேண்டும் அரசு.

சில இராணுவ அதிகாரிகளின் சட்டவிரோதமான – படுகேவலமான நடவடிக்கைகளினால் நாட்டின் முழு இராணுவத்துக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தாமதமின்றி தண்டனையை வழங்க வேண்டும் அரசு.

ஐ.நா. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிவிட்டு ஐ.நாவுடனும் பன்னாட்டுச் சமூகத்துடனும் முட்டி மோதினால் இலங்கைக்குத்தான் பாதிப்பு.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கமாட்டோம் என்று இலங்கை அரசு தொடர்ந்து மார்தட்டிக்கொண்டிருக்காமல் போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு உடன் தண்டனையை வழங்க வேண்டும்.

அதேவேளை, போர்க்குற்றம் தொடர்பில் எந்த விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். விசாரணைகளின்போது என் வசமிருக்கும் சாட்சியங்களை வழங்க நான் தயங்கமாட்டேன் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.